Ameer: பருத்திவீரன் சர்ச்சை... சசிகுமார், சமுத்திரகனி தொடக்கமே... பற்ற வைத்த கரு பழனியப்பன்!
சென்னை: கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

இந்நிலையில், பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குநர் அமீர் - ஞானவேல்ராஜா இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சசிகுமார், சமுத்திரகனி ஆகியோரைத் தொடர்ந்து இயக்குநர் கரு பழனியப்பனும் அமீருக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளார்.
அமீருக்கு கரு பழனியப்பன் ஆதரவு
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. அமீர் இயக்கிய இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்தார். இந்நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி வரை நஷ்டம் எனவும், இந்த பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருப்பதாகவும் அமீர் கூறியிருந்தார்.
இதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டிகளில், அமீர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஞானவேல்ராஜாவின் பேட்டி தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக அமீரும் அறிக்கை வெளியிட்டு பிரச்சினையை முடித்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். அதேநேரம், இந்தச் சம்பவத்தை நன்கறிந்தவர்கள் தனக்காக குரல் கொடுக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மெளனம் பேசியதே பட தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். அமீர் குறித்து ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா சொல்வது அனைத்தும் பொய் எனவும் அவர்கள் கூறியிருந்தனர். முக்கியமாக சமுத்திரகனி வெளியிட்ட அறிக்கை இந்தச் சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பருத்திவீரன் சர்ச்சையில் இயக்குநர் கரு பழனியப்பனும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனியை தொடர்ந்து இவரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் பருத்திவீரன் படத்தில் பணிபுரிந்த மற்ற கலைஞர்களும் உண்மையை பேச வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கரு பழனியப்பன் தனது ட்விட்டரில், 'மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர்! இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும்! கார்த்தி உட்பட என அவரை டேக் செய்துள்ளார். சமுத்திரகனியும் கார்த்தி அமைதியாக இருப்பதை தனது அறிக்கையில் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











