Ameer: “பருத்திவீரன் விவகாரம்.. அமீருக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை இது..” நந்தா பெரியசாமி ஆதங்கம்
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமீர் குறித்து தவறாக பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் தொடர்ந்து அமீருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போது இயக்குநர் நந்தா பெரியசாமியும் அவருக்காக குரல் கொடுத்துள்ளார்.

அமீருக்கு நந்தா பெரியசாமி ஆதரவு
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மதுரை பின்னணியில் அட்டகாசமான கிராமத்துத் திரைப்படமாக உருவான பருத்திவீரன், கார்த்தியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதேபோல், ப்ரியாமணிக்கும் தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில், பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பருத்திவீரன் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களில், இந்தப் படத்தின் தயாரிப்பில் இருந்து ஞானவேல்ராஜா விலகியுள்ளார். பின்னர் அமீர் தான் சொந்தமாக இந்தப் படத்தை தயாரித்து வெளியிட இருந்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அமீரை மிரட்டி பருத்திவீரன் படத்தின் ரிலீஸ் உரிமையை ஞானவேல்ராஜா வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் பருத்திவீரன் வெளியான பின்னரும் அமீருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணத்தை ஞானவேல்ராஜா கொடுக்கவில்லையாம். இதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அமீர். இந்த வழக்கு சுமார் 16 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் பருத்திவீரன் பட விவகாரம் குறித்து அமீரும் ஞானவேல்ராஜாவும் அடுத்தடுத்து பேட்டிக் கொடுத்திருந்தனர்.
இதில், அமீரை திருடன் என்றும், அவரால் யாருக்கும் பிரயோஜனம் இல்லையெனவும் ஞானவேல்ராஜா பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஒருகட்டத்தில் ஞானவேல் ராஜாவுக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதால், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் ஞானவேல்ராஜாவின் வருத்தத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார், சமுத்திரகனி மீண்டும் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இயக்குநர் நந்தா பெரியசாமியும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்திவீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்."
"கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம். தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்திவீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்." என கூறியுள்ளார். இதனையடுத்து அமீருக்கு மேலும் ஆதரவு கூடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











