Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் - செய்தியாளர்களிடம் ஆதாரங்கள் தந்த அமீர்
சென்னை: சேரன் மகளைக் காதலிக்கும் சந்துரு மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப் பெரிய பண மோசடிக் கும்பல் என்று கூறிய இயக்குநர் அமீர் அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்தார்.
இயக்குனர் சேரன் மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த சந்துரு காதல் விவகாரம் திரையுலகைத் தாண்டி, சமூக அளவிலும் விவாதிக்கப்படும் விஷயமாகிவிட்டது. இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் நீதிபதி உத்தரவின்படி, தாமினி அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சந்துரு மற்றும் அவர் குடும்பத்தினர் மீது இயக்குனர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
திருமணம் செய்து வைக்கத்தான் போனோம்
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சேரன் மகள் பிரச்னையை கேள்விப்பட்டு அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கத்தான் நாங்கள் சென்றோம். ஆனால் சந்துரு பற்றி விசாரித்த பிறகுதான் அவரது குற்றப் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தோம்.
இப்போது அசைக்க முடியாத பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சேரன் மகள் தவறான இடத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இவ்வளவு பாடுபடுகிறோம்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல். நான்கைந்து வீடுகளில் சந்துருவை வைத்து பெண்களை மயக்கி அந்த பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.
ராதா பத்மா கவுரி பாத்திமா...
சந்துருவின் அக்கா இயற்பெயர் ராதா. இப்போது அவர் தன் பெயரை பத்மா என்கிற கவுரி என்கிறார். அவர் பாத்திமா என்ற பெயரில் வாழ்ந்த கதை எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளி என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது இலியாஸ் என்பருடன் பாத்திமா என்ற பெயரில் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அவருக்கு நூருல் ஹரிதா, நூருல் சுபைதா என்ற இரு குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
சொத்துக்களைப் பறிக்க
இலியாஸ் சொத்துக்களை பறிக்க முஸ்லிமாக மாறி குடும்பம் நடத்தியது போல காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சந்துருவின் பெயர் அப்துல். அவரது அம்மாவின் பெயர் நபீசா பீவி.
பாத்திமா பெயரில் பாஸ்போர்ட்
பத்மா அப்போது பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறார். அதன் நகல் எங்களிடம் உள்ளது. இலியாஸ் இறந்த பிறகு அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடியிருக்கிறார். அவருடன் வாழ்ந்ததற்காக 300 பவுன் நகையும், 30 லட்சம் ரொக்கமும், விஜயவாடாவில் ஒரு வீடும் கொடுத்து இலியாஸ் குடும்பத்தினர் செட்டில் செய்திருக்கிறார்கள். பின்னர் பாத்திமா என்ற பெயரில் உள்ள பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி இலியாஸ் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் நகலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது.
இது அவங்க டெக்னிக்
பத்மா குடும்பத்தினர் இரண்டு பெண்கள் உள்ள குடும்பத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இளைய மகளை தங்கள் வீட்டு பையன்கள் மூலம் மயக்கி தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். மூத்த பெண் என்றால் திருமணம் செய்து வைத்து விடக்கூடும் என்று கருதித்தான் இப்படி செய்கிறார்கள்.
இளைய பெண் என்றால் பேரம் பேசலாம் என்பது அவர்கள் திட்டம். அப்படித்தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் 3 லட்சம் செட்டில்மென்ட் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இது போன்ற புகார்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை வெளியில் சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் பெண்களின் விவரங்களை மட்டும் நாங்கள் வெளியிடவில்லை.
தாமினியின் பேஸ்புக்
தாமினியின் பேஸ்புக்கை சந்துருதான் ஆபரேட் செய்து வருகிறார். 2013க்கு முந்தைய பேஸ்புக் தகவல்களை அழித்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு முன் சந்துருவுக்கு லோகநாதன், பிரகாஷ் என்ற இரு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்கள் எங்கே என்று விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும்.
போலி பாஸ்போர்ட்?
பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்துள்ள பத்மா, 2013 பிப்ரவரி 10,ம் தேதி சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். ஏற்கெனவே அவர் பாஸ்போர்ட்டை முடக்க புகார் தந்துள்ள நிலையில், இப்போது அவர் பயன்படுத்திய பாஸ்போர்ட் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ஆதாரங்களை வெளியிடுவோம்
எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களில் இப்போதைக்கு தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளோம். தேவைப்படும்போது இன்னும் ஆதாரங்களை வெளியிடுவோம்.
தாமினியை காப்பாற்றுவதோடு இந்த கும்பலிடம் இனி எந்த பெண்ணும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே இதில் தீவிரம் காட்டுகிறோம். என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ள பத்மா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.
பேட்டியின்போது இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.