Ameer: “அமீரை ஞானவேல்ராஜா ஏமாத்திட்டார்... பணத்த திருப்பிக் கொடுக்கணும்..” கஞ்சா கருப்பு அதிரடி
சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது.
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த பிரச்சினையில் அமீருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

கொந்தளித்த கஞ்சா கருப்பு
பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் அமீருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணத்தை ஞானவேல்ராஜா கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கிய அமீர், ஒருகட்டத்தில் அவரே தயாரிக்கவும் செய்துள்ளார்.
இதற்காக சசிகுமார் உட்பட அமீரின் நண்பர்கள், உறவினர்கள் பலரும் பணம் கொடுத்து உதவியுள்ளனர். ஆனால், இறுதியாக பருத்திவீரன் பட உரிமைகளை ஞானவேல்ராஜா மிரட்டி வாங்கிதாக தெரிகிறது. இதனால் தனக்கு சுமார் 2 கோடி வரை நஷ்டம் எனவும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அமீர் கூறியிருந்தார். இதுகுறித்து பதில் பேட்டிக் கொடுத்த ஞானவேல்ராஜா, அமீரை திருடன் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு, சேரன், நந்தா பெரியசாமி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதேநேரம் ஞானவேல்ராஜாவை யாரும் ஆதரிக்கவே இல்லை. இதனால், அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா. இருப்பினும் பருத்திவீரன் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அமீரின் ராம் படத்தில் கஞ்சா கருப்புவின் வாழவந்தான் கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பருத்திவீரனில் டக்ளஸ் கேரக்டரில் நடித்து செம்மையாக ஸ்கோர் செய்திருந்தார். இதனையடுத்து தற்போது அமீருக்கு ஆதரவாக பேசிய கஞ்சா கருப்பு, ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பருத்திவீரன் படத்தை அமீர் அண்ணன் தான் கடன் வாங்கி எடுத்து முடித்தார். ஞானவேல்ராஜா அமீர் அண்ணனை ஏமாற்றி பருத்திவீரன் படம் மூலம் 50 கோடி வரை சம்பாதித்துவிட்டார். ஆனால், அமீர் அண்ணனுக்கு நியாயமாக கொடுக்க வேண்டியதை கூட ஞானவேல்ராஜா செட்டில் செய்யவில்லை. இதெல்லாம் தர்மமே கிடையாது, ஞானவேல்ராஜா இப்ப இத்தனை கோடிகள் சம்பாதிக்க அமீர் அண்ணன் தான் காரணம் என்பதாக கஞ்சா கருப்புக் கூறியுள்ளார்.
மேலும், அமீர் அண்ணன் குறித்து தவறாக பேசிய ஞானவேல் ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு அவரை ஏமாற்றிய பணத்தை திருப்பிக் கொடுக்கணும். இப்படி நன்றி மறந்து பேசுவதெல்லாம் சரியில்லை என ஞானவேல்ராஜாவை லெஃப்ட் & ரைட் வாங்கியுள்ளார் கஞ்சா கருப்பு.


Click it and Unblock the Notifications











