ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள்...அருண் பாண்டியனுக்கு அமீர் பதிலடி
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தையும் இந்தியா முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படங்களின் வசூல் சாதனையை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

மாறாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ளதை ஒப்பிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் இது சினிமா விழா மேடையிலேயே இரு பிரபலங்கள் வெளிப்படையாக விவாதிக்கும் அளவிற்கு போய் உள்ளது.
நடிகர் கருணாஸ் லீட் ரோலில் நடித்துள்ள படம் ஆதார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது மற்ற மொழி படங்களை தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டும், தமிழ் ஹீரோக்களின் சம்பளம் பற்றியும் பேசினார் அருண் பாண்டியன்.

நடிகர்களின் அதிக சம்பளம்
அருண்பாண்டியன் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 90% அல்லது 80% சம்பளமாக தருகிறார்கள். தர வேண்டியிருக்கிறது என சொன்னார். விஜய், அஜித் போன்ற நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் தான் தமிழ் சினிமாவின் தரம் குறைந்து போயுள்ளதாக கூறினார்.

கேஜிஎஃப் 2 உடன் ஒப்பிடாதீர்கள்
அவரைத் தொடர்ந்து பேசிய அமீர், 'தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது' என அருண் பாண்டியன் சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. 'ஆர் ஆர் ஆர்', 'கே ஜி எஃப்' போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே 'சந்திரலேகா' என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். 'ஆயிரத்தில் ஒருவன்', 'நாடோடி மன்னன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை.

தமிழ் சினிமா தான் முன்னோடி
சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். '16 வயதினிலே', 'கிழக்கு சீமையிலே' போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.

ராஜமெளலியே சொன்னாரே
தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இன்று வேற்று மொழிப்படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமெளலி அவர்களே ஆர் ஆர் ஆர் படத்தின் விளம்பர நிகழ்வில்," தமிழ் சினிமா எங்களது தாய்வீடு என்று சொல்லியிருக்கிறார்.. இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ்சினிமா பிரமிப்பை தருகிறது." என்றும் சொன்னார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











