Ameer: பருத்திவீரன் சர்ச்சையில் தொடர் அழுத்தம்... அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!
சென்னை: அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பான சர்ச்சை கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது.
அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இதில் இயக்குநர் அமீருக்கு சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா, கரு பழனியப்பன், பொன்வண்ணன் என பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது இயக்குநர் அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு ரிலீஸானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதுமட்டும் இல்லாமல் கார்த்தி, ப்ரியாமணி, இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது.
அதேநேரம் பருத்திவீரன் படம் வெளியாகும் முன்பே, இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அமீர் இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால், பட்ஜெட்டில் பிரச்சினை ஏற்பட்டதுடன் ஷூட்டிங்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இதனால், அமீர் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் எனக் கூறியிருந்தார்.
அதேபோல், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் அமீரால் தனக்கு நஷ்டம் எனவும், அவர் சொன்னதை விட 1 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்ததாகவும் விளக்கம் கொடுத்தார். அப்போது அமீர் குறித்து ரொம்பவே தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார் ஞானவேல்ராஜா. அதுமட்டும் இல்லாமல் அமீரை திருடன் என்றும், பருத்திவீரன் மூலம் தான் அவர் சினிமாவை கற்றுக்கொண்டதாகவும் தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.
ஞானவேல்ராஜாவின் பேட்டி கோலிவுட்டில் மிகப் பெரிய அளவில் புயலை கிளப்பியது. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதோடு அமீரிடம் ஞானவேல்ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
இப்படி தொடர்ச்சியாக ஞானவேல்ராஜாவுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வந்தன. இதனையடுத்து தற்போது அவர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பருத்திவீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா’ என்றுதான் குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.”
“அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பருத்துவீரன் சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பருத்திவீரனால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் என அமீர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமீர் குறித்து பேசியதற்கு மட்டுமே வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா, இந்த வழக்கு குறித்தும் அதன் பின்னணி பற்றியும் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது முக்கியமானது.


Click it and Unblock the Notifications











