Ameer: “பிரயோஜனம் இருந்தால் அமீர் காலை கழுவி குடிப்பியா?” ஞானவேல்ராஜாவை வெளுத்துவிட்ட கரு பழனியப்பன்
சென்னை: அமீரின் பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது.
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த பிரச்சினையில் ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார் கரு பழனியப்பன்.
ஞானவேல் ராஜாவை வெளுத்துவிட்ட கரு பழனியப்பன்
அமீரின் பருத்திவீரன் திரைப்படம் ரிலீஸாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. கார்த்தியை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இந்தப் படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பருத்திவீரன் படத்தால் இயக்குநர் அமீர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மோதல் ஏற்பட்டது.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான இந்தப் படத்தால், தனக்கு ரூ. 2 கோடி வரை நஷ்டம் என அமீர் கூறியிருந்தார். அதேபோல், ஞானவேல்ராஜாவும் அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார். மேலும் அமீர் பொய் கணக்கு கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் ஒரு திருடன் எனவும் விமர்சித்திருந்தார். இதனால், பருத்திவீரன் சர்ச்சை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.
இதனையடுத்து அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், ஞானவேல்ராஜாவுக்கும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். நாளுக்கு நாள் இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததால், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா.
ஆனால், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது, அதற்காக உண்மையை பலி கொடுக்க முடியாது என சசிகுமார் மீண்டும் பதிலடி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கரு பழனியப்பன் கொடுத்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது. அதில், ஞானவேல் ராஜாவின் இந்த திமிர் பேச்சுக்குப் பின்னால் சூர்யாவின் குடும்பமும் இருக்கிறதோ என சந்தேகம் வருகிறது எனக் கூறியுள்ளார்.
மேலும், ஞானவேல்ராஜாவுக்கு சிவகுமார் அட்வைஸ் செய்திருக்க வேண்டும். அவர் வருத்தம் தெரிவித்தது கூட சிவகுமார் சொன்னதால் இருக்கும் என நினைப்பதாக கூறினார். அதேபோல், ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்ததில் கூட உண்மை இல்லை எனவும் விமர்சித்துள்ளார். முக்கியமாக அமீரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என ஞானவேல் ராஜா கூறியதை சுட்டிக் காட்டிய கரு பழனியப்பன், “அமீரால் பிரயோஜனம் இருந்தால் அவர் காலை கழுவி குடிப்பியா” எனவும் ஞானவேல்ராஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











