Ameer: “அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி கிடையாது..” ஞானவேலுக்கு சினேகன் பதிலடி!
சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையேயான மோதல் 16 ஆண்டுகளாக தொடர்கிறது.

அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனையடுத்து பலரும் அமீருக்கு ஆதரவுத் தெரிவித்து வரும் நிலையில், பாடலாசிரியர் சினேகனும் தற்போது ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமீருக்கு பெருகும் ஆதரவு
சூர்யா நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், பின்னர் சூர்யாவின் தம்பி கார்த்தியை தனது பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். மெளனம் பேசியதே, ராம் என அமீரின் முதல் இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், கார்த்தியை அமீர் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என சூர்யாவும் சிவகுமாரும் விரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அமீர் - கார்த்தி கூட்டணியில் பருத்திவீரன் உருவானது. மணிரத்னத்திடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த கார்த்தி, இயக்குநராக வேண்டும் என்ற முடிவில் தான் இருந்துள்ளார். ஆனால், சிவகுமாரும் சூர்யாவும் கார்த்தியை நடிப்பின் பக்கம் திசை திருப்பினர். இதற்கு சரியான ஆள் இயக்குநர் அமீர் தான் என முடிவு செய்த சிவகுமார், கார்த்தியை பருத்திவீரன் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்போதும் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஒரு படைப்பாக மிளிர்கிறது பருத்திவீரன். அதேபோல் முதல் படத்திலேயே கார்த்தியும் கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ப்ரொமோட் ஆனார். இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். ஆனால், படம் முடியும் போது அவருக்கும் அமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் எனவும், அதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் அமீர் கூறியிருந்தார். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிக் கொடுத்த ஞானவேல்ராஜா. அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் திருடன் எனவும் கூறியிருந்தார். மேலும், மிக தரம் குறைந்த வார்த்தைகளால் அமீரை அவர் விமர்சித்திருந்தார்.
ஞானவேல்ராஜாவின் பேட்டி வைரலான நிலையில், அவர் சொல்வதெல்லாம் பொய் என அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வரிசையில் இன்று காலை பருத்திவீரனில் நடித்திருந்த பொன்வண்ணனும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கவிஞரும் பாடலாசிரியருமான சினேகன் அமீருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், “நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்திவீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
சினேகனின் இந்த டிவிட்டர் பதிவும் ஞானவேல்ராஜா தரப்புக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் தற்போது அமீருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











