விஜய் அழைத்தால் கட்சியில் இணைய தயார்.. ஓபனாக உறுதியளித்த இயக்குநர் அமீர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களம் காணவிருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை அக்கட்சி தொண்டர்களும், விஜய்யும் இப்போதே எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிலைமை இப்படி இருக்க விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் ஓபனாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவர் விஜய். கடைசியாக அவர் நடித்த லியோ படம் தோல்வி படமாகவே அமைந்தது. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

அரசியல் பிரவேசம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். அதற்கு விஜய் எந்தவிதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் சைலெண்ட் மோடில்தான் இருந்தார். அதேசமயம் தனது மக்கள் இயக்கம் மூலமாக தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்துவந்த அவர்; யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக ட்விட்டரில் அறிவித்து கட்சியையும் தொடங்கிவிட்டார்.
குவியும் பாராட்டு: கட்சி தொடங்கினாலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவிருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை அக்கட்சியினர் இப்போதே எடுத்திருக்கின்றனர். சமீபத்தில்கூட விஜய் கல்வி விருது விழா நடந்ததும்; அதில் விஜய் தரமாக பேசியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வியாபாரம் செய்யும்போது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள்.
அமீர் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "நான் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன். இன்று இருக்கும் அரசியல் நெருக்கடி காரணமாக அரசியலுக்கு நான் வர வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லோருமே அரசியலில்தான் இருக்கிறோம். திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது. யாரெல்லாம் பாசிசம், ஆரியத்திற்கு எதிராக கொள்கை கொண்டிருக்கிறோமோ அவர்கள் அனைவருமே திராவிட அரசியல் செய்பவர்கள்தான்.
தயாராக இருக்கிறேன்: மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் தாராளமாக இணைவேன். அவருடனும், சீமானுடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்" என்றார். இதற்கிடையே விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதாக இருக்கிறார். அந்தப் படத்தை அநேகமாக ஹெச்.வினோத் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











