ம்ம்க்கும் எங்களை மிரட்டு.. சிவக்குமார் வீட்டுல ஏமாந்துட்டு வா.. அமீரை சைலெண்ட் ஆக்கிய அவர் அம்மா
சென்னை: பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக மாறியவர் அமீர். அவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் பருத்திவீரன் திரைப்படம்தான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனால் அந்தப் படம் அவருக்கு சில மோசமான அனுபங்களையும் கொடுத்தது. 2023ஆம் ஆண்டுகூட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் பற்றி பேச அந்தப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியது குறிப்பிடத்தக்கது.
மௌனம் பேசியதே, ராம் படங்களை இயக்கிய அமீர் மூன்றாவதாக இயக்கிய படம் பருத்திவீரன். இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி அறிமுகமான படம் மட்டுமின்றி அவர் வலுவாக நிற்பதற்கு விதை போட்ட படமும் அதுதான். தமிழ் சினிமா வரலாற்றிலேயே பராசக்தி படத்துக்கு பிறகு ஒரு அறிமுக ஹீரோவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கு அடையாளமாக மாறியிருப்பதும் பருத்திவீரன் படம்தான்.
பருத்திவீரன் பிரச்னை: இப்போதும் அப்படம் பலரது லேப்டாப்களிலோ, மொபைலிலோ இருக்கும். அனைவருக்குமே மிக சிறந்த அனுபவங்களை கொடுத்த பருத்திவீரன்; அதன் இயக்குநர் அமீருக்கு சங்கடத்தையே கொடுத்தது. படம் எடுத்துக்கொண்டிருந்தபோதே பொருளாதார பிரச்னை வர; அதை அமீர்தான் தீர்த்து வைத்தார். ஆனால் பட ரிலீஸுக்கு பிறகு அவரை சூர்யா தரப்பு நடத்திய விதத்தை யாராலும் மன்னிக்க முடியாது என்பது அமீர் தரப்பினரின் வாதம்.

மீண்டும் கிளப்பிய ஞானவேல் ராஜா: ஓய்ந்திருந்த பருத்திவீரன் பிரச்னையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் கிளப்பினார். அவர் கொடுத்த ஒரு பேட்டியில், "பருத்திவீரன் படத்தை அமீர் சொன்ன தேதியில் முடித்து கொடுக்கவில்லை. பன்றியை வைத்து தவறான கணக்கு காண்பித்தார். அவர் ஒன்றும் பாரதிராஜா இல்லை. அமீருக்கு அவ்வளவு சீன்லாம் இல்லை" என்று நக்கலாக பேசியிருந்தார். அது அனைவரையும் கொதிப்பில் ஆழ்த்தியது.
விளாசிய படைப்பாளர்கள்: ஒரு மெகா ஹிட் படத்தை மட்டுமின்றி திரைத்துறையில் பெரிய அடையாளத்தை ஒரு ஹீரோவுக்கு கொடுத்த இயக்குநரை ஞானவேல் ராஜா அப்படி பேசியதை பார்த்து படைப்பாளர்கள் ஒன்று திரண்டார்கள். முதலில் அமீர் அறிக்கை வெளியிட; அடுத்தடுத்து கரு. பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்டோரும் அறிக்கைகள் வெளியிட்டு ஞானவேல் ராஜாவை கண்டித்தார்கள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஞானவேல் வருத்தம் தெரிவித்தார்.
போராளிக் கலைஞன் அமீர்: இந்நிலையில் தனியார் யூடியூப் சார்பில் போராளிக் கலைஞன் அமீர் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கரு. பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"பருத்திவீரன் படம் பார்த்துவிட்டு சூர்யாவின் மேனேஜருக்கு ஃபோன் செய்து, என்னதான் பிரச்னை என்று கேட்டேன். அதற்கு அவர் பெரிதாக ஒன்றும் இல்லை டைரக்டரே 50, 60 லட்சம்தான் பிரச்னை என்று சொன்னார். அதற்கு நானோ, 'ஒரு தட்டில் 2 கோடி ரூபாய் வைத்து அமீரிடம் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வாருங்கள். பராசக்தி படத்துக்கு பிறகு ஒரு அறிமுக நடிகரை இப்போதுதான் கொண்டாடுகிறார்கள்' என சொன்னேன். அவர் ஆச்சரியமாக அப்படியா என கேட்டார்.
அமீர் அம்மா சொன்னது: அவரிடம் பேசிவிட்டு அமீருக்கு ஃபோன் செய்தேன். அமீரோ, 'சொல்லுங்க நான் மதுரைல வீட்டில் தூங்கிட்டு இருகெகென்' என்று சொன்னார். படத்தை பற்றியோ தான் ஏமாற்றப்பட்டோம் என்பது குறித்தோ எந்த கவலையும் இல்லாமல் வந்தோம் படம் எடுத்தோம் என்று இருந்தார். இவரது அம்மா அமீரை பற்றி ஒரு வார்த்தை சொல்வார். அதாவது இவர் வீட்டில் ஏதாவது அதட்டும்போது, 'ம்ம்க்கும் இங்க நல்லா அதட்டு. அந்த சிவக்குமார் வீட்டில் போய் ஏமாந்துட்டு வா" என்று சொல்வார். பருத்திவீரன் படம் வெளியான பிறகு பத்து வருடங்கள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பருத்திவீரனைத்தான் எடுத்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











