வெற்றிமாறன் திரைக்கதை.. அமீர் இயக்கத்தில்.. மதப் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இறைவன் மிகப் பெரியவன்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் "இறைவன் மிகப் பெரியவன்".
JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அமீர் இந்த படம் சொல்ல வரும் கதை குறித்து பேசியுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

அமீர் இயக்கத்தில்
சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். அவர் இயக்கத்தில் வெளியான ஜீவாவின் ராம் மற்றும் கார்த்தியின் பருத்திவீரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் விதைத்தன. கடந்த 2013ம் ஆண்டு ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்த ஆதிபகவன் திரைப்படத்திற்கு பிறகு அமீர் இயக்கப் போகும் திரைப்படம் இறைவன் மிகப் பெரியவன்.

வெற்றிமாறன் திரைக்கதையில்
இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜனாக நடித்து மிரட்டிய அமீர் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தில் அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமீர் இயக்கும் படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதியுள்ளார். அவருடன் தங்கமும் இணைந்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

இறைவன் மிகப் பெரியவன் துவக்க விழா
இப்படி திரை ஜாம்பவான்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் இந்த இறைவன் மிகப் பெரியவன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் அமீர் மற்றும் வெற்றிமாறன் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமீர் பேச்சு
இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா. ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா.

பாரதிராஜாவும் கதை வாங்குவார்
பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.

வெற்றியுடன் இணைந்து
நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்த போது, இந்தப்படத்தை இந்தகதையை செய்யலாம் என தோன்றியது நான் வெற்றியிடம் இறைவன் மிகப் பெரியவன் செய்யலாமா என கேட்டேன், கண்டிப்பாக செய்யலாம் என்றார். இடையில் நான் இன்னொரு படமும் செய்திருக்கிறேன். அதைப்பற்றி அறிவிப்பு விரைவில் வரும் இப்படத்தை பொறுத்தவரை கரு பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு இது மட்டும் தான் முடிவாகியுள்ளது எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வது தான் பிடிக்கும்.

முஸ்லிம் மதத்தை
வெற்றி முதலில் சொன்னபோதே இதை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றியது. இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காக இதை செய்ய வேண்டும் என தோன்றியது.

அழகான உறவு
இந்தப்படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவை தான் சொல்லவருகிறது. நீங்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். சூரியை வைத்து ஒரு படம் செய்யவுள்ளேன். இன்னும் அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்யவுள்ளேன். சினிமாவில் என்னை முழுதாக பார்க்கலாம். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும் நன்றி என தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

வெற்றிமாறன் பேச்சு
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்தகதையை சொன்னார் அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டோம் அப்புறம் ஒரு சமயத்தில் இந்தக்கதை எடுக்கலாம் என தோன்றியது. வழக்கமாக நான் எழுதவே மாட்டேன் ஆனால் இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன், ஆனால் அப்போது செய்ய முடியவில்லை. கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன்.
Recommended Video

அமீர் எடுத்தால் சரியாக இருக்கும்
கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் நான் எடுக்கவா என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் திரைக்கதையில் சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சனையை சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம் நன்றி என இயக்குநர் வெற்றிமாறன் அட்டகாசமாக பேசி முடித்தார். இறைவன் மிகப்பெரியவன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











