என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா? அமிதாப்பச்சன் கேள்வி!
சென்னை: தனக்கு வேறு ஏதாவது வேலை கிடைக்குமா? என்று பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

தியேட்டர்கள்
கொரோனா பரவல் தீவிரம் அடைந்துவருவதால் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்பது தெரியவில்லை. திறந்தாலும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில் சில மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நிபந்தனைகளுடன் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மகாராஷ்டிர அரசு அனுமதித்தது.

பங்கேற்கக் கூடாது
கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேலான, நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்த விதிமுறையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது இந்தி நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம்
அந்த விதியை ஏற்றால், 65 வயதைக் கடந்த அமிதாப்பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஷக்தி கபூர், நஸ்ருதீன் ஷா, சுபாஷ் கை, மகேஷ்பட், சேகர் கபூர், பிரியதர்ஷன் எனப் பலர் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. எனவே இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர்கள் சங்கமும் இதை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

நடிகர் அமிதாப்பச்சன்
பின்னர் மூத்த நடிகர் பிரமோத் பாண்டே, இந்திய மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களும் படப்பிடிப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நடிகர் அமிதாப்பச்சன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: வேதனைப்படுத்தும் பல கவலைகள் இருக்கின்றன.
Recommended Video

வேலை கிடைக்குமா?
அரசு நிர்வாகம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. இதனால் என்னைப் போன்ற 78 வயதுகாரர்கள் அவ்வளவுதானா? இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது திரைப்பட அமைப்பு. நீதிமன்றம், அந்த தடையை நீக்கி இருக்கிறது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன் என்னை போன்றவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா? ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











