அது முற்றிலும் பொய்யானது.. கொரோனா குறித்து வெளியான செய்தி.. அதிரடி காட்டிய அமிதாப் பச்சன்
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் உடல் நிலை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அவர்கள் இருவரும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆங்கில மீடியா ஒன்று அமிதாப் பச்சனின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும், அவர் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமாகி விட்டார் என்றும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியை பார்த்து கடுப்பான நடிகர் அமிதாப் பச்சன், இது முற்றிலும் பொய்யான செய்தி, யாரும் இதை நம்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் செய்துள்ளார். மேலும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எப்படி இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள் என்றும் விளாசி தள்ளியுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சனின் அந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
77வயதாகும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்களுடன் சேர்ந்து பல பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும், தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக தனது ரசிகர்களுடன் அமிதாப் பச்சன் தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











