கொரோனாவில் இருந்து விடுபட்டார் நடிகர் அமிதாப் பச்சன்.. அபிஷேக் பச்சனுக்கு தொடர்கிறது சிகிச்சை
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
Recommended Video
கடந்த மாதம் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சமீபத்தில் குணமடைந்தனர்.

கொரோனா பிடியில் சிக்கிய அமிதாப்
கடந்த மாதம் ஜூலை 11ம் தேதி பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் Big B அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன், ஆராத்யாவுக்கு கொரோனா நெகட்டிவ் என்றே முதலில் வந்தது. கொரோனா பிடியில் சிக்கிய அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன்கள் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் மகளுக்கும்
அடுத்த நாள் ஜூலை 12ம் தேதி நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இருவருக்கும், கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டும் கொரோனா பரவ வில்லை.

பிரபலங்கள் ரசிகர்கள் பிரார்த்தனை
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த இந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அமிதாப் பச்சன் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்தனர். சில இடங்களில் ரசிகர்கள் யாகங்களையும் நடத்தினர்.

அப்படியே போய் விட வேண்டும்
சில விஷமம் பிடித்த நெட்டிசன்கள், அமிதாப் பச்சன் கொரோனா நோயிலேயே பலியாகி விட வேண்டும் என்றும், 77 வயது ஆள் எப்படி கொரோனா நோய் தொற்றில் இருந்து மீளப் போகிறார் என்றும் ட்ரோல் செய்து வந்தனர். அந்த ட்ரோல்களுக்கு மருத்துவமனையில் இருந்தபடியே நடிகர் அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்தார்.

தாயும் சேயும் குணம்
கொரோனா பரவல் காரணமாக அதே நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கடந்த ஜூலை 27ம் தேதி கிட்டத்தட்ட இரு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் நன்றி தெரிவித்து இருந்தார்.

அப்பா குணமாகிட்டார்
கொரோனா பாதிப்பில் இருந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு, இன்று கொரோனா நெகட்டிவ் ஆனதை அடுத்து, பரிபுரணமாக கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது மகன் அபிஷேக் பச்சன் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிகிச்சையில் அபிஷேக் பச்சன்
ஆனால், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு மட்டும் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு போகவில்லையாம். துர் அதிர்ஷ்டவசமாக தனக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மீண்டு வீடு திரும்புவேன் என அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











