ANR Awards: சிரஞ்சீவிக்கு விருது வழங்கிய அமிதாப்.. கண்ணீர் சிந்திய நாகார்ஜுனா குடும்பம்!
ஹைதராபாத்: இந்திய திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாக இருந்தவர்களில் மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் மிகவும் முக்கியமானவர். இவரது 100வது பிறந்த நாள் நேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ANR அறக்கட்டளையின் கீழ் அக்கினேனி நாகார்ஜுனா தலைமையில் ஹைதராபாத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ்டூடியோவான, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அமிதாப் பச்சன் கரங்களால் ANR விருது வழங்கப்பட்டது.
மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிற்கும் மிகவும் முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தவர். இவர் மறைந்த பின்னர் இவரது மகனான, நாகார்ஜுனா அவரது பிறந்த நாளில் தெலுங்கு சினிமாவில் சிறப்பாக பங்களிப்பினை செலுத்துவோருக்கு விருது வழங்கி கௌரவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று, மறைந்த திரைத்துறை ஜாம்பவான் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் 100வது பிறந்த நாள். இவரது 100வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்போவதாகவும் இந்த பிறந்த நாள் விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் மெஹா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி என ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

அமிதாப் பச்சன்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேசுகையில், "இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசுவது மிகவும் கடினம். மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் வாழ்க்கைக் காட்சிகளைப் (சிறப்பு ஏ.வி திரையிடப்பட்டதைக் குறிப்பிடுகின்றார்) பார்த்த பிறகு நன்றியைத் தவிர வேறொன்றுமில்லை. ANR அறக்கட்டளை ஆற்றி வரும் சேவைகளுக்காக நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இந்திய திரையுலகத்திற்கே பெருமை சேர்த்தவர் மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவ்" என்று அமிதாப் தான் பேசும்போது குறிப்பிட்டார்.

யார் வாரிசு: மேலும் அவர் பேசுகையில், "நாக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது தந்தையின் பாரம்பரியத்தையும் அவரது சாதனைகளையும் முன்னெடுத்துச் செல்வதைப் பார்க்கும்போது, எனது தந்தை ஹரிவம்சராய் பச்சன் தனது கடைசி கால கட்டத்தில் எழுதிய கவிதையில் இடம் பெற்றிருந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது. அவரது கடைசி உயிலாக எழுதிய கவிதையில்.. 'என் மகன் என் மகன் என்பதற்காக என் வாரிசாக முடியாது. என் வாரிசு என்பவன் என் புகழை தொடரும் என் மகன்தான்'. நாக் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கினேனியின் பாரம்பரியத்தை கொண்டு செல்வதில் வெற்றி பெற்றவர்களாக உள்ளனர், இவர்கள்தான் உண்மையான வாரிசுகள். ஸ்ரீ அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட மாபெரும் மனிதரின் பெயரால் வழங்கப்படும் விருதை எனது அன்பு நண்பர் சிரஞ்சீவிக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி" எனவும் பேசினார்.

கண்ணீர்: இந்த விருது வழங்கும் விழாவில், மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தனது கடைசி காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் இருந்தபோது, தனது குடும்பத்தினருக்கு ஆடியோ அனுப்பியிருந்தது, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் திரையிடப்பட்டது. இதனைப் பார்த்த பலரும் கண்ணீர் சிந்தினர்.



Click it and Unblock the Notifications











