எதையும் செயல்ல காட்ட விரும்பறேன்... 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன்... பிக் பீ காட்டம்!
மும்பை : கொரோனா பாதித்தவர்களுக்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் இத்தகைய நிதியுதவி எதையும் அளிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் அவரை வம்பிழுக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் எதையும் சொல்வதைவிட செயலில் காட்டுவதையே தான் விரும்புவதாக பிக் பீ தெரிவித்துள்ளார்.

அதிக உயிரிழப்புகள்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தினந்தோறும் 4,000 பேருக்கு மேல் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி சினிமா நடிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து அரசுக்கு கைகொடுத்து வருகின்றனர். தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கடுப்பான பிக் பீ
இந்நிலையில் சிலர் சினிமாவில் அதிகமாக சம்பாதித்தும் இந்த நேரத்தில் கைகொடுக்காமல் உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனும் ஒருவர். இதையடுத்து கடுப்பாகிய அவர், தன்னுடைய வலைப்பக்கத்தில் இத்தகைய கமெண்ட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

விளம்பரம் செய்ய விரும்பவில்லை
தன்னை பொருத்தவரை நன்கொடை அளிப்பது குறித்து பேசுவதை காட்டிலும் செயலில் காட்டுவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். தான் கொடுக்கும் நன்கொடைகளை விளம்பரம் செய்வது அர்த்தமற்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தங்களுடைய குடும்பத்தினர் செய்யும் சேவைகள் அனைத்தும் மறைக்கப்பட்டே செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சமூக சேவைகள்
நாம் செய்யும் சேவைகள் மற்றும் கொடுக்கும் நன்கொடைகள் பெறுபவருக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். தானும் தன்னுடைய குடும்பத்தினரும் இணைந்து பல்வேறு சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4,00,000 பேருக்கு உணவு
கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பின்போது தினந்தோறும் 4,00,000 பேருக்கு ஒரு மாதத்திற்கு உணவு அளித்ததாகவும் 5000 பேருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மாஸ்க் உள்ளிட்டவற்றை சுகாதார ஊழியர்கள், போலீசார், மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தத்தெடுத்து வளர்ப்பதாக அறிவிப்பு
மும்பையில் இருந்து உ.பிக்கு முழு ரயிலை புக் செய்து மைக்ரண்ட் பயணிகளை அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் தேவைகள், கல்வி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











