இனி பொம்மையாக இருக்க மாட்டேன்.. மலையாள நடிகர் சங்கத் தலைவர் சுவேதா மேனன் ராஜினாமா.. நள்ளிரவில் மோதல்
கொச்சி: மலையாளத் திரையுலகின் 'அம்மா' நடிகர் சங்கம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து பல்வேறு பாலியல் புகார்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கித் தவித்து வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையிலான கமிட்டி, 'நீதிபதி ஹேமா கமிட்டி' அறிக்கைக்குப் பின் எழுந்த பாலியல் புகார்களால் ஒட்டுமொத்தமாகப் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சங்கத்தின் முதல் பெண் தலைவராக பிரபல நடிகை சுவேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தற்போது அவரும் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது இந்தியத் திரையுலகையுமே அதிர வைத்துள்ளது.
நான் ஒன்றும் பொம்மை இல்லை: கொச்சியில் நடந்த 'அம்மா' அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு-செலவு கணக்குகளைப் பொதுச்செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் தாக்கல் செய்தபோது வாக்குவாதம் வெடித்தது. மூத்த நடிகர்களான சித்திக், இடவேள பாபு ஆகியோர் தலைமையில் ஒரு தரப்பினர், இந்தக் கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனப் பயங்கரமாகக் கூச்சலிட்டு போராட்டம் செய்தனர்.
கூட்டத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, தலைவர் சுவேதா மேனன் தனது பதவியையும், சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் புகார்களைச் எதிர்கொண்டு வரும் சில நபர்களின் கைகளுக்குள் இந்தச் சங்கத்தைக் கொண்டு செல்லச் சதி நடக்கிறது. அதற்குத் துணையாக நான் வெறும் கையாட்டி பொம்மையாக இங்கே இருக்க விரும்பவில்லை என்று ஆவேசமாகக் கூறிவிட்டு வெளியேறினார்.

உள்ளே நடக்கும் ரகசிய லாபிகள்: மலையாள சினிமா வட்டாராரங்களின்படி, 2017 ஆம் ஆண்டு நடந்த நடிகை கடத்தல் வழக்கில் இருந்து 2025 டிசம்பரில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப்பின் ஆதரவாளர் லாபி இன்னமும் இந்தச் சங்கத்திற்குள் மிக வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் புகார்களில் சிக்கிய வேறு சில ஆண் நடிகர்களின் லாபிகளும் பின்னணியில் வேலை செய்வதால் சங்கத்தை நடத்துவது சவாலாக மாறியுள்ளது. பெண் தலைவரைத் தேர்ந்தெடுத்தாலும், சங்கம் இன்னும் ஆண் ஆதிக்க அமைப்பாகவே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயந்து ஓட்டம்: ஆனால், இதுகுறித்து பேசிய மூத்த நடிகர் ஜெகதீஷ், சுவேதா மேனன் தலைமையிலான கமிட்டியால் கணக்குகளைச் சரியாகத் தாக்கல் செய்ய முடியவில்லை. அத்துடன் தங்களின் உள்விவகாரங்களை மீடியாவுக்குக் கொண்டு சென்று சங்கத்தின் பெயரைக் கெடுத்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்கள் முயன்றனர். அதற்கு பயந்துதான் தீர்மானம் வருவதற்கு முன்பே ஒட்டுமொத்தக் குழுவும் ராஜினாமா செய்துள்ளது என்று மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். தற்போது இந்த நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, நடிகர் மற்றும் எம்.எல்.ஏ-வான ரமேஷ் பிஷாரடி தலைமையில் ஒரு தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் நடக்கும் வரை இவர்களே சங்கத்தைக் கவனிப்பார்கள்


Click it and Unblock the Notifications