இப்போ அவன் குடும்பத்த பார்க்க யாருமே இல்ல... உயிரிழந்த அஜித் ரசிகரின் நண்பர்கள் கண்ணீர்...
சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நள்ளிரவு துணிவு படத்தின் முதல் காட்சியான FDFS நள்ளிரவு ஒரு மணிக்கே திரையிடப்பட்டது.
இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதல் விடிய விடிய திரையரங்குகளில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னை ரோகிணி திரையரங்கு முன்னர் அஜித்தின் ரசிகர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு FDFS-ல் சோகம்
அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று உலகம் முழுவதும் வெளியானது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு படத்தின் FDFS, இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்னை ரோகிணி திரையரங்கு முன்பு நடந்த விபத்தில் அஜித் ரசிகர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரியில் இருந்து விழுந்து பலி
ஏற்கனவே ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், அங்குள்ள அஜித் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன, இதனால் அங்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிகழ்வு முடியும் முன்னரே சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் ரோகிணி தியேட்டர் முன்பு விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டெய்னர் லாரியின் மேலே, அஜித் ரசிகர் பரத்குமார் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பர்கள் வேதனை
இந்தச் சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் அஜித் பல ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். மேலும் அஜித் ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டார். இந்நிலையில், விபத்தில் பரத்குமார் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பரத்தின் நண்பர்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

அஜித்துக்காக உயிர விட்டுட்டான்
மேலும், அவனது குடும்பத்துக்கு வேற யாருமே கிடையாது. அவன் தான் அந்த வீட்டுக்கு எல்லாமும். அக்கா, தம்பி, அம்மா மூனு பேருக்காகவும் கிடைக்கிற வேலையெல்லாம் பார்த்து சம்பாதிச்சுட்டு வந்தான். இப்போ இப்படி அநியாயமா போய்ட்டான். தல, அஜித்தின்னு சொல்லிட்டே இருப்பான். அஜித் தான் என்னோடு உயிர்ன்னும் சொல்வான், இப்போ அவருக்காகவே உயிர விட்டுட்டான். இனி அவன் குடும்பத்துக்கு யாருமே கிடையாது. தலயும் வர மாட்டார், தளபதியும் வரமாட்டாங்க. அவன் குடும்பம் தான் நடுத்தெருவுல நிக்குது. துணிவு படம் பார்க்கணும்ன்னுதான் தொடர்ந்து இரண்டு நாளா வேலை பார்த்து காசு சேர்த்தான் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மருத்துவமனை முன்பு கூடியிருந்த பரத்குமாரின் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க கதறி அழுதது பார்ப்பவர்களையும் வேதனையில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











