பெரும் இழப்பு.. தழுதழுத்த குரலில் இளையராஜா.. அவர் போல பாட இனி யாரு இருக்கா?
சென்னை: பாடகி ஜானகி அம்மாவின் மறைவு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு கர்நாடக அரசு முழு அரசு மரியாதை வழங்கி கௌரவித்தது. இவரது மறைவு தொடர்பாக ஏற்கனவே இசைஞானி இளையராஜா தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் தனது இசைக் கச்சேரியை முடித்துவிட்டு சென்னை வந்தரை, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் ஜானகி அம்மா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, " பெரும் இழப்பு.. பெரும் இழப்பு.. அவர் போல பாட இந்தியாவிலேயே ஆள் இல்லை" என்று மிகவும் தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் இசை வாழ்க்கை தொடங்கும் போது அதாவது அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடியவர் ஜானகி அம்மா. அவரது மறைவு இசைஞானி இளையராஜாவுக்கு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
திரை இசையில் இசைஞானி இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி என இவர்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்களுக்கு என்றுமே தனி வரவேற்பு கிடைத்தது. இன்றைக்கும் இவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் இருந்து கொண்டே ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தி கேட்டதும், “ பெருமதிப்பிற்குரிய ஜானகி அம்மாவின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக எனக்கு இருந்தது. தன்னுடைய சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களை, தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கி ஜானகி அம்மா வாழ்ந்தார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
உலக இசையமைப்பாளர்கள், மாமேதைகள் அவர்களுடைய ஒவ்வொருவர் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமானதாக இருந்திருக்கிறது. ஆனால் ஜானகி அம்மா அவர்கள் தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார். மிகவும் கடினமான உழைப்பாளி, என்னுடன் சேர்ந்து விடாப்பிடியாக அவரும் கடின உழைப்பை மேற்கொள்வார். அவருடைய இழப்பு இந்திய திரைப்பட இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு" என்று மிகவும் வருதத்துடன் வீடியோ ஒன்றை ஏற்கனவே இசைஞானி இளையராஜா வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications