மேடையில் பாடும் போது தேம்பி அழுத பவதாரிணி.. தேற்றி பாடவைத்த இளையராஜா.. கண்கலங்க வைத்த பழைய வீடியோ!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்தார். பவதாரிணியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும்நிலையில், பவதாரிணி மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது தேம்பி அழுத வீடியோ ஒன்று தற்போது காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பவதாரிணி, தந்தையைப் போலவே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். பாரதி படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து பலத்திரைப்படங்களில் பாடி உள்ள இவர் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை நினைத்தபடி இல்லாததால், கணவரை விட்டு பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு பல சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சிகிச்சையிலும் முன்னேற்றம் இல்லாததால், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதுவும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பவதாரிணி புற்று நோயால் மறைந்த செய்தி, திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பவதாரணி மறைவுக்கு திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
நேரில் ஆறுதல்: இதனிடையே பவதாரணியின் உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, சிவகுமார், ராமராஜன், விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல, வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் திநகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கண்கலங்க வைக்கும் வீடியோ: இந்நிலையில், மேடையில் பவதாரிணி பாடிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேடையில் பவதாரிணி பாடிக்கொண்டு இருக்கும் போதே திடீரென உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழுகிறார்.. அப்போது அவரது அருகில் இருந்த இளையராஜா, மகளின் தோளில் தட்டிக்கொடுத்து அவரை ஆறுதல் படுத்திவிட்டு, மகளுடன் சேர்ந்து பாடுகிறார். இந்த வீடியோவை இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகள் அழுகையில் தேற்றிய தந்தையை... தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே.. பற்றினைப் பற்றிட பற்றிடும் சோகத்தீயை..அனைத்திட ஏதுமுளதோ? இப்பூமியில் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது


Click it and Unblock the Notifications











