நாடு நல்லா இருக்கணும்னு.. எல்லோரும் அரசியலுக்கு வந்தா? அஜித்தின் நச் பதில்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே வலம் வந்த வண்ணம் இருந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, பயிலகம், நூலகம், நிவாரண உதவிகள் என அதை நோக்கியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை பனையூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியை பிப்ரவரியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது. அதன்படி, தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பதிவு செய்யப்பட்டு தமிழக வெற்றி கழகம் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என அறிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதே போல பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி தொடங்குவது எளிது, தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றால் யார் வேண்டும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது என்று கூறியிருந்தார்.
அஜித்தின் நச் பதில்: இந்நிலையில், அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு, நடிகர் அஜித்தின் ஆதரவு இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வருகிறது. அதில், தொகுப்பாளராக இருக்கும் சந்தானம், உங்களுக்கு பின்னால், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கு, இவர்களை நீங்க சினிமாவிற்கு மட்டுமே பயன்படுத்தப்போறீங்களா இல்லை, அரசியலுக்கு வருவீங்களா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்துள்ள அஜித், தலைவர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், நாடு நல்லா இருக்கணும் என்பதற்காக எல்லோரும் அரசியலுக்கு வந்தா? அது சரியானதாக இருக்காது. என்னை பொருத்த வரைக்கும், அவர் அவர்களின் கடமையை அவர்கள் சரியாக செய்தாலே நாடு நல்லா இருக்கும்.
கடமையை செய்தாலே போதும்: மேலும், ஒவ்வொருவரும் அரசியல் வாதியை குறை சொல்கிறோம், ஐஏஎஸ் அதிகாரிகளை குறை சொல்கிறோம். மக்கள் யார் மீதாவது பழியை சுமத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதே போல உலகம் முழுவதும் உரிமை போராட்டங்கள், உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால், கடமையை பற்றி யாரும் பேசுவதே இல்லை, அவர் அவர்களின் கடமையை அனைவரும் சரியாக செய்தாலே போதும் என்று அஜித் பேசிய பழைய வீடியோவை, அவரது ரசிகர்கள் நேரம் பார்த்து டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











