பிஞ்சிலேயே பழுக்க முடியாது... வெம்பத் தான் முடியும் ஜிவி பிரகாஷ்!
இன்றைய தமிழ் சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நிலை இருக்கிறது. ஓரளவுக்கு பாப்புலாரிட்டியோ பணமோ இருந்தால் போதும். அந்த பாப்புலாரிட்டியும் பணமும் நான்கு படங்கள் வரைக் கூட காப்பாற்றாது. திறமையும் உழைப்பும்தான் ஒரு ஹீரோவின் கேரியரை நிர்ணயிக்கும். அப்படி அவசர அவசரமாக ஹீரோவாகி விட்டு கதை தேர்வு செய்யக்கூட தெரியாமல் தொடர்ந்து தோல்விகளை தந்து தவித்து வருகிறார் ஜிவி.பிரகாஷ்.
உருகுதே மருகுதே(வெயில்), பூக்கள் பூக்கும் தருணம்(மதராசப்பட்டிணம்), யாத்தே யாத்தே (ஆடுகளம்), பிறை தேடும் இரவிலே (மயக்கம் என்ன)... இன்னும் நிறைய பாடல்களை சொல்லலாம். 20 வயதைக் கூடத் தொடாமல் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அந்த அரும்பு மீசை பையன் கொடுத்த ஹிட்கள் இவை. ஆனால் இந்த பாழாய் போன நடிப்பு ஆசை எப்போது ஜிவி.பிரகாஷுக்கு வந்ததோ அதன் பின் அந்த பையன் மீது வந்தது எல்லாம் வெறுப்புதான்.
பென்சில் என்ற படத்தில் அறிமுகமாவதாக சொன்னார்கள். அந்த படத்தின் டைட்டிலுக்கு ஜிவி ஓகேதான் என்று தோன்றியது. ஸ்டில்களும் அழகாக இருந்தன. ஆனால் படமோ ஏகப்பட்ட ஃபைனான்ஸ் பிரச்னைகளால் லேட்டாகிப் போனது. அந்த இடைவெளியில் நடித்த படங்கள்தான் டார்லிங்கும், த்ரிஷா இல்லனா நயன் தாராவும். முன்னது கூட ஹாரர் காமெடி ஓகே. த்ரிஷா இல்லனா நயன் தாரா முழுக்க முழுக்க இளைஞர்களின் வக்கிர புத்தியைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டது. பெண்களை இப்படி அப்படி அல்ல... இழிவோ இழிவு என்று இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் எழுந்த எதிர்ப்பு அலையே படத்தை ஹிட் ஆக்கியது. விளைவு இன்று வரை ஜிவியிடமிருந்து அந்த மாதிரியான படங்களின் படையெடுப்பு தொடர்கிறது.

ருசி கண்ட பூனை போல ஜிவி.பிரகாஷூம் தன் படங்களில் சில விஷயங்கள் கட்டாயம் இடம்பெறுவதைப் போலப் பார்த்துக்கொள்கிறார். முக்கியமாக காமெடி என்ற பெயரில் தன் எதிரியான தனுஷை கிண்டல் அடிப்பது. ப்ரூஸ்லீயில் கூட வில்லனுடன் இருக்கும் விஞ்ஞானி தனுஷை போலவே இருக்கிறார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கூட தனுஷ் நல்ல நடிகன் என்று பெயர் எடுத்துவிட்டார். ஆனால் ஜிவியோ ஒவ்வொரு படத்திலும் மோசமான நடிகர் என்றுதான் பெயர் எடுத்து வருகிறார்.
இன்னமும் ப்ராம்ப்ட் வைத்துதான் டயலாக் பேசுகிறாராம் ஜிவி. தமிழ் தெரியாத மற்ற மொழி நடிகைகளுக்குதான் ப்ராம்ப்ட் கொடுத்து டயலாக் பேச வைப்பார்கள். இத்தனை படங்களில் நடித்தும் கூட ஜிவி யால் ஒரு சின்ன டயலாக்கைக் கூடப் பேச முடியவில்லை என்பது அவரது சோம்பேறித்தனத்தைதான் காட்டுகிறது. டயலாக்கே இப்படி பேசினால் நடிப்பெல்லாம் எட்டிப் பார்க்குமா?
யாருமே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு உள்ளே வருவதில்லை. ஆனால் வந்தபிறகும் கூட கற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பது என்ன நியாயம்? விஜய் ஆண்டனி எல்லாம் நடிப்பதற்கு முன்பு பயிற்சி எடுத்த பிறகே நடிக்க வந்தார். காரணம் தயாரிப்பும் அவரே... இன்னமும் கூட கதைத் தேர்விலும் தனது பாத்திரத் தேர்விலும் பார்த்து பார்த்து செயல்படுகிறார் விஜய் ஆண்டனி. இசையையும் கோட்டை விடாமல் நிற்கிறார்.
ஆனால் ஜிவியோ முதல் இரண்டு ஹிட்களால் திரண்ட தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ்களை வாங்கிப்போட்டு காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள ஆசைப்பட்டாரே தவிர கதை கேட்பதில் சிறிது கூட கவனம் செலுத்தவில்லை.
சொந்தக் காசில் படம் எடுத்தால்தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஜிவி பிரகாஷிடம் அது இருப்பதாக இதுவரைத் தெரியவில்லை. ஆனால் தனுஷை வம்பிழுப்பது, அஜித்தை வம்பிழுப்பது என்று எதையாவது செய்து லைம்லைட்டில் இருக்க ஆசைப்படுகிறார்.
நடிப்போடு சேர்த்து இசைத் திறமையும் காணாமல் போய்விட்டதோ என எண்ண வைக்கிறது ஜிவியின் சமீபகால இசை.
பாலா படத்துக்கு முன்பு ஜிவி.பிரகாஷ் படம் எது ரிலீஸ் ஆனாலும் பார்க்கப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டோம். இனி விமல் ஆவதும் விஜய் ஆண்டனி ஆவதும் ஜிவி.பி யின் கைகளில் தான் இருக்கிறது.
- ஆர் ஜி


Click it and Unblock the Notifications











