அன்றே கணித்தார் ஆண்டவர்.. ’சதிலீலாவதி’ல சொன்ன வசனம்.. சாதித்துக் காட்டிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!
சென்னை: அஞ்சலி, தளபதி, சதிலீலாவதி என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களின் பெயர்களில் இவரது பெயரும் இடம்பெற்றது.
பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த சவுண்ட் இன்ஜினியருக்கான தேசிய விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வென்றுள்ளார். இந்நிலையில், அன்றே கணித்தார் ஆண்டவர் என கமல்ஹாசன் ரசிகர்கள் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

2022ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படம் பல விருதுகளை குவித்தது.
4 தேசிய விருதுகள்: மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட 4 தேசிய விருதுகள் கிடைத்தன. அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஒலிக்கலவை செய்த சவுண்ட் இன்ஜினியர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் குடியரசுத் தலைவர் கரங்களால் விருதுகள் வழங்கப்படும்.
7 தேசிய விருதுகள் வென்ற இசைப்புயல்: பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் இந்தியளவில் சிறந்த இசையமைப்பாளர் என்கிற தேசிய விருதை தட்டித் தூக்கியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருதுகளை வென்று இந்தியளவில் நம்பர் 1 இசையமைப்பாளராக மாஸ் காட்டி வருகிறார்.
ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு விருது: அஞ்சலி, தளபதி, தலைவாசல், மே மாதம், சதி லீலாவதி, ஆசை மற்றும் உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் சவுண்ட் டிசைனராக தனது பணியை தொடங்கினார். மன்மதன் அன்பு, விஸ்வரூபம், ஓ காதல் கண்மணி, குற்றமே தண்டனை, ஸ்பைடர், காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், பொன்னியின் செல்வன், ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அடுத்ததாக தக் லைஃப் படத்திற்கும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்காக சிறந்த சவுண்ட் இன்ஜினியருக்கான விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றே கணித்த ஆண்டவர்: சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருப்பார் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அப்பா ஸ்பேனர் கொடுங்க, ஸ்க்ரூ டிரைவர் கொடுங்க என வந்து கேட்கும் அவரை பார்த்து பெரிய இன்ஜினியராக வருவானாக்கும் என கமல்ஹாசன் சொன்ன நிலையில், சவுண்ட் இன்ஜினியராக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி மாறி தேசிய விருதை வென்றுள்ள நிலையில், அன்றே கணித்த ஆண்டவர் என கமல்ஹாசன் ரசிகர்கள் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியையும் கமலையும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











