நான் பேண்ட் போட்ட அரசியல்வாதி.. பிக்பாஸ் வீட்டில் கமல் சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரண்டாவது வார இறுதியில் நுழைந்துள்ளது.
நேற்றைய தினம் போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் போட்டியாளர் சாந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் ஜிபி முத்துவும் வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் போட்டியாளர்களின் சிறப்பான அறிமுகத்துடன் துவங்கிய நிலையில் தற்போது இரண்டாவது வார இறுதியில் போட்டி நுழைந்துள்ளது. நேற்றைய தினம் தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கடந்த வார நிகழ்வுகள் குறித்து பல விஷயங்களை பேசினார்.

அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள்
கடந்த வாரத்தில் முக்கிய நிகழ்வாக அசிம் மற்றும் ஆயிஷா இடையிலான மோதல் காணப்பட்டது. அசல் கோலாறுக்கு எதிராக தனலட்சுமி போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து தன்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார் ஜிபி முத்து.

போட்டியாளர்களிடம் பேசிய கமல்
இதனிடையே வாரயிறுதியையொட்டி நேற்றைய தினம் போட்டியாளர்களிடம் தோன்றி கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் போட்டியாளர் விக்ரமனுக்கு ஆதரவாக பேசினார். அரசியல்வாதி என்பவன் கேள்விக் கேட்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் என்று கூறினார். இதை தனக்கு தைத்ததற்காக சொல்லவில்லை என்றும் பொதுவாகவே இதை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவன் -இவன் என பேசிய கமல்
அவன் கேள்வி கேட்பான் என்று கூறிய கமல், உடனடியாக தலையில் அடித்துக் கொண்டு, போட்டியாளர்களிடம் பேசி பேசியே தனக்கும் அவன் என்ற வார்த்தைகள் வருவதாக கூறிய கமல், அவர் கேள்வி கேட்பார் என்று மாற்றிக் கொண்டார். வெள்ளை வேட்டி போட்டவர்களுக்காக தான் வக்காலத்து வாங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் பேண்ட் போட்ட அரசியல்வாதி
தானும் வேட்டியை அணிவேன் என்றாலும் தான் பேண்ட் போட்ட அரசியல்வாதி என்றும் விக்ரமனும் அப்படித்தான் என்று நினைப்பதாகவும் கமல் மேலும் தெரிவித்தார். தான் மற்ற போட்டியாளர்களுக்கு எடுத்து சொல்ல நினைக்கும் விஷயம், விக்ரமன் சுயமரியாதையை தட்டிக்கேட்க முற்பட்டதை போலவே மற்றவர்களுக்கு அதை கொடுக்கவும் செய்தார்.

அவமரியாதை செய்யவில்லை
இந்த வாக்குவாதத்தில் அவர் கடைசி வரை யாரையும் பதிலடியாக கூட அவமரியாதை செய்ய வில்லை என்பதையும் கமல்ஹாசன் சுட்டிக் காட்டினார். இதையடுத்து போட்டியாளர்களுடன் அமர்ந்திருந்த விக்ரமன், கைக்கூப்பி கமலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜிபி முத்து
நேற்றைய தினம் நடன மாஸ்டர் சாந்தி போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனிடையே, தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜிபி முத்துவும் போட்டியிலிருந்து விலகினார். போட்டியில் சிறப்பாக கவனம் ஈர்த்த இவர் இடையிலேயே விலகியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











