புற்றுநோய்? சிகிச்சைகாக அமெரிக்கா பயணம்.. சொத்துகளை அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்தாரா சிவராஜ்குமார்?
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது தந்தை வழியில் இருந்து தனக்கு வர வேண்டிய சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்ததாக மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்காக அவர் அமெரிக்கா சென்று ஒரு மாதம் அங்கு மருத்துவமனையில் தங்கி, உயர்தரமான மேல் சிகிச்சை பெறப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக இந்த செய்தி வெளியானதில் இருந்து சிவராஜ்குமாரின் ரசிகர்கள் பெரும் சோகத்திற்குள் மூழ்கடித்தது.

இது தொடர்பாக பலரும் பலவிதமாக கூறிவந்த நிலையில், ஒருநாள் சிவராஜ்குமாரே இது தொடர்பாக பேசினார். அப்போது, “எனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்காக நான் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறப்போவதும் உண்மைதான். ஆனால் அது புற்றுநோய் அல்ல. மேலும், அந்த நோய் குறித்து முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும், எனக்கு புற்றுநோய் என பதற்றமடைய வேண்டாம். நான் நலமுடன் இந்தியா திரும்புவேன் என கூறியிருந்தார். இவர் இவ்வாறு பேசியதே ரசிகர்களை ஆறுதல் படுத்தினாலும், முழுமையான நிம்மதியை அளிக்கவில்லை.

அந்தணன்: சிகிச்சைக்காக அமெரிக்க செல்லவேண்டும் என்ற காரணத்தால், சிவராஜ்குமார் ஏற்கனவே தான் ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகினார். இந்த நிலையில் சிவராஜ்குமார் உடல்நிலை குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் நேற்றைய அதாவது டிசம்பர் 4ஆம் தேதி, வலைபேச்சு நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர் கூறியதாவது, " மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரைப் பற்றி திரைத்துறையில் எல்லோரும் பேசுவதை கேட்கும் போது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகரா என ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய சகோதரரும் நடிகருமான மறைந்த புனித் ராஜ்குமாரும் மிகுந்த மனிதநேயம் கொண்டவர். இவர் அவரையே மிஞ்சுமளவு இருக்கிறார்.

சொத்து: அவருடைய தந்தை ராஜ்குமார் மறைந்த போது சொத்துக்களை சரிபாதியாக பிரித்திருக்கிறார்கள். அப்போது, என் தந்தை சம்பாதித்த சொத்தில் இருந்து எனக்கு எந்த பங்கும் வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், தான் வேண்டாம் எனக் கூறிய சொத்தை மொத்தமாக அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்து விடுங்கள். நான் சினிமாவில் சம்பாதிப்பது மட்டும்தான் என்னுடைய சொத்தாக இருக்க வேண்டும் எனக் கூறியதாக அந்தணன் கூறியுள்ளார். ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என சினிமா வட்டாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயிலர் 2: தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் போல கன்னடத்தின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிவராஜ்குமார். இவர் கடைசியாக தமிழில் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். மேலும் அதற்கு முன்னர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். சில நிமிடங்களே வந்தாலும் படத்தில் இவருடைய காட்சிகள் பெரிய அளவில் கைத்தட்டல் வாங்கியது. அதன்பின் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஈட்டி இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது சிகிச்சை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் தனக்கு பதில் தனுஷை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் மீண்டும் மிரட்டுவார் என்றும் அவரது உடல் பூரண நலம் பெற்று விரைவில் திரைத்துறைக்கு திரும்புவார் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











