Aneethi: “உங்கள் ஈகோ அங்கே உடைந்துவிடும்..” அநீதி படத்தால் எமோஷனலான இயக்குநர் வசந்தபாலன்!
சென்னை: வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி திரைப்படம் கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அநீதி படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்நிலையில் அநீதி திரைப்படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூலில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அநீதி படத்தால் எமோஷனலான வசந்தபாலன்: ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக வேலை பார்த்த வசந்தபாலனுக்கு, 'வெயில்', 'அங்காடித் தெரு', 'காவியத் தலைவன்' போன்ற படங்கள் நல்ல அங்கீகாரம் கொடுத்தன. அதேநேரம் கடந்தாண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி திரைப்படம் கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அநீதி படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. நவதாராள மையக் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான விளைவுகளையும் அன்றாட வாழ்வில் வேலை கொடுத்திருக்கிற அழுத்தத்தையும் தன்னுடைய பாணியில் இயக்கியிருந்தார் வசந்தபாலன்.
தனியார்மய கொடுமைகள், தொழிலாளர்களின் சங்க உரிமை, முதலாளித்துவத்தின் கோரத்தை இயக்குநர் வசந்தபாலன் ரத்தம் தெறிக்க தெறிக்க பேசியிருப்பதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அநீதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 நாட்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து திரையரங்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் தனது முகநூலில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, "கடந்த ஜூன் 20 ம் தேதியிலிருந்து முதன்முறையாக தயாரிப்பாளராக இசை வெளியீட்டுக்கு தயாரானேன். முடிந்தளவு நண்பர்களை, தயாரிப்பாளர்களை, நட்சத்திரங்களை நேரில் சென்று இசை வெளியீட்டுக்கு அழைத்தேன். எதுக்கு பார்மாலிட்டி வாட்ஸ்அப்பிலே அழைப்பிதழ் அனுப்பு பாலன் என்றவர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை என்பதையும் கவனித்தேன்."
"எந்த விழாவிற்கும் நம் தகுதிக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அவசியம் ஆழமாக புரிந்தது. எனினும் இயக்குநர் ஷங்கர் சார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்கள் பாக்யராஜ் சார், பிரபு சாலமன், அறிவழகன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், தனஞ்செயன், கதிரேசன் என திரையுலக நண்பர்கள் சூழ வெற்றிகரமாக இசை வெளியீடு நடந்தது. உடல் துவண்டிருந்தது."
"அடுத்த 15ம் நாள் பட வெளியீடு ஆகவே சோர்ந்து போகாமல் மீண்டும் என்னையவே தயார்படுத்திக்கொண்டு ஓடத் துவங்கினேன். ஒன்று நன்றாக புரிந்தது. உங்களுக்கு ஈகோ என்ற ஒன்று இருந்தால் அது முழுதாக சுக்கல் சுக்கலாக உடைகிற தருணம் நீங்கள் திரைப்பட தயாரிப்பாளராக மாறுகிற தருணம். ஒரு சதவீதம் இருந்த ஈகோவும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. பட வெளியீட்டு வேலைகள் ஜரூராய் துவங்கின. புரோமோசன், நேர்காணல்கள் ஹைதராபாத், கோயமுத்தூர் பயணங்கள் கோவிட் அலை போல நீண்டது."
"படம் வெளியாவதற்கு முந்தைய நாள் பெரும் பதட்டம் தொத்தியது. பிரஸ் ஷோவில் கிடைத்த வரவேற்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. திரையரங்கில் வெளியான நாளின் மாலைக் காட்சியில் இருந்து திரையரங்குகளில் கூட்டம் வர துவங்கியது. நான், அர்ஜூன், துஷாரா மூவரும் திரையரங்கு திரையரங்கா செல்லத் துவங்கினோம். ஒருநாளில் 6 காட்சிகளுக்கு இரவு 3 மணி வரை சென்னை நகரெங்கும் சுற்றினோம். 'அந்த தியேட்டர் ஹவுஸ்புல் சார்... இந்த தியேட்டர் ஹவுஸ்புல் சார்... நைட்ஷோ சிட்டி புல்லா ஹவுஸ்புல் சார்' என்ற தகவல்கள் நண்பர்கள் உதவியாளர்கள் வாயிலாக வரத் துவங்கின."
"பதட்டம் குறைந்து... மகிழ்பதட்டம் உருவானது. மக்களின் ஆதரவை, ரசனையை பார்க்க கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல் என பெரிய உலா முடிந்து இன்று வெற்றிகரமான 20வது நாள். திரையரங்குகளில் தொடர்ந்து கேட்ட கைதட்டல்கள், கண்ணீர்துளிகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. 50 நாட்களாக தூங்காத விழிகள் கெஞ்சுகின்றன இன்றிரவு நன்றாக தூங்க வேண்டும்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











