Aneethi Review: முதலாளித்துவத்தின் கோரத்தை ரத்தம் தெறிக்க பேசுகிறது... அநீதி டிவிட்டர் விமர்சனம்
சென்னை: வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அநீதி படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் அநீதி படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

அநீதி டிவிட்டர் விமர்சனம்: ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரிடம் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்த வசந்தபாலனுக்கு, 'வெயில்' திரைப்படம் தான் சிறப்பான அங்கீகாரம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 'அங்காடித் தெரு', 'காவியத் தலைவன்' போன்ற படங்களை இயக்கியிருந்தார். கடந்தாண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், வசந்தபாலனின் அநீதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அநீதி படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் தனது படங்களில் எளிய மக்களின் வலி மிகுந்த வாழ்வியலை பேசுவதே வசந்தபாலனின் வழக்கம். அதேபோன்று இந்த முறை இன்னும் வித்தியாசமான கதைக் களத்தில் அநீதி படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. நவதாராள மையக் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான விளைவுகளையும் அன்றாட வாழ்வில் வேலை கொடுத்திருக்கிற அழுத்தத்தையும் தன்னுடைய அட்டகாசமான பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். தனியார்மய கொடுமைகள், தொழிலாளர்களின் சங்க உரிமை, முதலாளித்துவத்தின் கோரத்தை ரத்தம் தெறிக்க தெறிக்க பேசி இருக்கிறார் என நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல், வசந்தபாலனின் அநீதி திரைப்படம், மக்களுக்கான நீதியை பேசுகிறது என பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், அநீதி திரைப்படத்தை எழுத்தாளரும் நடிகருமான கவிதா பாரதி தனது முகநூலில் பாராட்டியுள்ளார். Swiggy, Zomato பணியாளர்களிடம் சாப்டீங்களா என கேட்ட போதெல்லாம் அதில் ஒருவர் கூட ஆம் என சொன்னதில்லை. அவர்களில் ஒருவனான நாயகனின் கதையை ஆரம்பிக்கிறார் வசந்தபாலன். நாயகனின் தன்மானத்தை இழிவுபடுத்தும் காட்சிகளோடு ஆரம்பமாகி பின் காதல் கதையாக மாறுகிறது. நாயகனின் வலிமிகுந்த கடந்தகாலம் அவனை உள்ளூர மனப்பிறழ்வில் வைத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகனுக்கு ஒரு சாக்லெட் வாங்கித் தருவதற்காக உயிரிழக்கும் பாத்திரத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார். அந்த கதையும் காளியின் கதாபாத்திரமும், அவர் நடிப்பும் படத்திற்கு காவியத்தன்மையைத் தருகிறது. ஏழை பையன், பணக்காரப் பெண் என வழக்கமான சட்டகத்திற்குள் கதை நுழைகிறது. இது வசந்தபாலனின் வழக்கமில்லையே என்று நம்ப முடியாமல் பார்க்கையில், நாயகிக்கும் வலிமிகுந்த வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார் இயக்குநர்.
அர்ஜூன் தாஸும் துஷாராவும் சிறப்பாக நடித்துள்ளனர், கூடவே ஜிவி பிரகாஷின் இசையும் அருமை. ஒரு காதல் கதை, க்ரைம் கதையாக மாறுமிடத்தில் மட்டும் சிறு போதாமையை உணர்ந்தேன். அதன்பிறகான காவல்துறை விசாரணை போலீஸ் என்கிற சிஸ்டத்தை அம்மணமாக்குகிறது. ஒரு அறமற்ற விளம்பரத்தில் இருந்து தான் அநீதிக்கான கதை தோன்றியது என வசந்தபாலன் கூறியிருந்தார். அதற்காகவே அநீதி வெல்லட்டும் என பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











