'அங்குசம்' பட இயக்குநர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி
அங்குசம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மனுக்கண்ணனை மர்ம நபர்கள் சிலர் இன்று தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாகக் கொண்டு, ஒரு உண்மைச் சம்பவத்தை சினிமாவாக இயக்கியிருக்கிறார் மனுக்கண்ணன்.

இந்தப் படத்துக்கு வரி விலக்கு பெறுவதிலேயே அரசுத் தரப்போடு மோதியவர் மனுக்கண்ணன். தமிழக அமைச்சர் ஒருவர் பணம் கேட்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், படம் சில தடங்கல்களைக் கடந்து இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று தன் படம் வெளியாக உள்ள அமைந்தகரை பிவிஆர் அரங்குக்குப் போய் பார்த்துவிட்டு, படத்தின் தயாரிப்பு நிர்வாகி குமரனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அமைந்தகரை சாலை ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார் மனுக்கண்ணன். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தினர் சில மர்ம நபர்கள். தாக்கிய இருவரும் பைக்கில் வந்துள்ளனர். முகத்தில் கர்ச்சீப் கட்டியிருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. கண்ணன் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற டிரைவர் மற்றும் தயாரிப்பு நிர்வாகி குமரனையும் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த மனுக்கண்ணன், குமரனை மற்றும் டிரைவரை பில்ரோத் மருத்துவமனையில் சேர்ர்த்துள்ளனர்.
பட்டப்பகலில், காலை பத்தரை மணிக்கெல்லாம் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











