AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி குறித்து கபிர் சிங் நடிகர் ஆதில் ஹுசைன் பேசியதற்கு இயக்குநர் சந்தீப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது.

கடும் விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம். உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
செலிபிரிட்டிகளும் விமர்சனம்: படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடகர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது.
கபிர் சிங்: இதற்கிடையே தெலுங்கில் தான் எடுத்த அர்ஜுன் ரெட்டி படத்தை ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் ஆதில் ஹுசைனும் முக்கியமான ரோலில் நடித்தார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'கபிர் சிங் படத்தில் நான் நடித்திருக்கக்கூடாது என்று வருத்தப்படுகிறேன். நான் வேறு ஒரு வேலையில் பிஸியாக இருந்தேன். ஒரே ஒருநாள் டேட் வேண்டும் என்று கேட்டார்கள். உடனே எனது மேனேஜரிடம் நிறைய பணம் கேளுங்கள் கண்டிப்பாக தரமாட்டார்கள் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ நான் கேட்ட தொகையை கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
கதையே கேட்கவில்லை: கதையே கேட்காமல், ஸ்க்ரிப்ட்டை படிக்காமல் நான் நடித்த ஒரே படம் கபிர் சிங். அர்ஜுன் ரெட்டி படத்தையும் நான் பார்க்கவில்லை. கபிர் சிங் ரிலீஸான பிறகு அதை பார்க்க டெல்லியில் இருக்கும் திரையரங்குக்கு சென்றேன். 20 நிமிடங்களுக்கு மேல் என்னால் அந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டேன். அனிமல் படத்தையும் பார்க்கவில்லை. அதனால் அதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது. சமூகத்திற்கு தேவையில்லாத கருத்தைத்தான் கபிர் சிங் பேசுகிறது, கொண்டாடுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சந்தீப் ரெட்டி பதிலடி: இந்நிலையில் இந்தப் பேட்டியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, "நீங்கள் நம்பும் 30 ஆர்ட் படங்கள் மூலம் கிடைக்காத புகழ் நீங்கள் வருத்தப்படும் ஒரு பிளாக்பஸ்டர் படம் மூலம் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு Passaionவிட பேராசைதான் முக்கியம் என்பது தெரிந்தும் உங்களை எனது படத்தில் நடிக்க வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டாம். உங்கள் முகத்தை AI உதவியுடன் தூக்கிவிடுகிறேன். நன்றாக ஸ்மைல் செய்யுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











