வாரிசு படப்பிடிப்பில் அனுமதியின்றி 5 யானைகள்.. விலங்குகள் நல வாரியம் அதிரடி நோட்டீஸ்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் 5 யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரம்மாண்ட செட் போட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 5 யானைகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதை கண்டுபிடிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சிலர் அங்கே ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நிலையில், இரு தரப்பும் போலீஸில் பரபரப்பு புகார்களை அளித்தனர்.

5 யானைகள்
வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. யானை உள்ளிட்ட மிருகங்களை பயன்படுத்த சினிமாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனுமதியின்றி வாரிசு படத்துக்காக நூற்றுக்கணக்கான மாடுகளும், 5 யானைகளும் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிய ஒரு செய்திக்குழு சென்றது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ட்ரோன் பறக்கவிட்டு
ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள் சிலர் படம் பிடித்துள்ளனர். உடனடியாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டதும் அந்த செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பிடுங்கி உள்ளனர்.

இருதரப்பும் புகார்
செய்தியாளர்கள் கடத்தப்பட்டதாக காட்சிகள் அந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற நசரத்பேட்டை காவல் துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் ஸ்டேஷன் வர சொல்லி உள்ளனர். தங்களை காரில் அழைத்துச் சென்று தாக்கியதாக செய்தியாளர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். விஜய் தரப்பும் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டதாக புகார் கொடுத்தனர்.

விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்
சட்டப்படி சினிமாவில் விலங்குகள் மற்றும் பறவைகள் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்றும் வாரிசு படக்குழுவினர் உரிய அனுமதியின்றி 5 யானைகள் பயன்படுத்தியதாக தங்களுக்கு வந்துள்ள புகார் தொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஷ்வரா கிரியேஷனுக்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பி உள்ளது.

மெர்சல் படத்திலும்
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் மேஜிக் செய்யும் காட்சியில் நிஜ புறாவை துன்புறுத்தியதாக கிளம்பிய புகாரை தொடர்ந்து அந்த காட்சியில் மேஜிக் பால் போன்ற சிஜி மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது வாரிசு படத்தில் யானைகள் உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் யானைகளை பயன்படுத்தும் காட்சிகளுக்காக படக்குழு தாய்லாந்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











