ஷங்கர் சொல்ற மாதிரிதான்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு எவன் டா.. இந்தியன் 2 விழாவில் அனிருத் ஓபன் டாக்
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2 அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம். இந்தச் சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் அனிருத் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமடைந்த அவர்; இந்தியன் 2 பட பணிகளை தூசு தட்டினார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பிறகு லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்துகொள்ள படத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

விறுவிறு ஷூட்டிங்: அதனையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல் இதனையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஷங்கரும், கமல் ஹாசனும் மும்முரமாக உழைத்தார்கள். இடையே வசந்தபாலனும் படத்தின் சில காட்சிகளை ஷூட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான ஷங்கர் டெம்ப்ளேட்டுக்குள்தான் படம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அதேசமயம் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்றும்; நிச்சயம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்றும் கமலின் ரசிகர்களும், ஷங்கரின் ரசிகர்களும் ஓபன் ஸ்டேட்மெண்ட்டை சமூக வலைதளங்களில் விட ஆரம்பித்திருக்கின்றனர்.
இசை வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், ஷங்கர், சுபாஸ்கரன், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். கமல் ஹாசன் தொப்பி அணிந்தபடி கறுப்பு நிற உடையில் அட்டகாசமாக வந்திருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அட உலக நாயகன் வயது ஏற ஏற அழகாகிக்கொண்டே போகிறாரே என்று புகழ்ந்து தள்ளினர்.
அனிருத் பேச்சு: விழாவில் அனிருத் வழக்கம்போல் ஒரு லைவ் ஃபெர்ஃபார்மன்ஸை செய்தார். பிறகு பேசிய அனி, "அவரோட காலம் இவரோ காலம் என்று சமூக வலைதளங்களில் போடுவார்கள். ஷங்கர் சார் சொல்ற மாதிரிதான், 6 அப்புறம் 7 டா.. ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு அப்புறம் எவன் டா" என்று கூறினார். இப்போது அனிருத்தான் கோலிவுட்டில் அதிக பிஸியான இசையமைப்பாளராக இருக்கிறார். சொல்லப்போனால் ஏ.ஆர்.ரஹ்மானைவிடவும் அதிக படங்களுக்கு அவரே இசையமைக்கிறார். சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.ரஹ்மானை அவர் புகழ்ந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
முன்னதாக, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. அதனை கேட்ட ரசிகர்கள், பரவாயில்லையே வரிகளும், இசையும் நன்றாக இருக்கிறதே என்று அனிருத்தை புகழ்ந்தார்கள். இப்போது முழு பாடல்களும் வெளியாகியிருக்கின்றன. அதில், கதற விடுறோம் என்ற பாடலை கேட்ட ரசிகர்கள், அனிருத்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். மேலும், இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











