இணையத்தில் ஆபாச பாடல்: அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய ஹைகோர்ட்டு உத்தரவு
சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் காட்சியை இணைய தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
'3' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் மூலம் அறிமுகப் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் இசையமைப்பாளர் அனிருத். பாடல்கள் மூலம் பிரபலமானது போலவே சர்ச்சைகளிலும் சிக்கினார் அவர்.
முதலில், நடிகை ஆண்ட்ரியாவுக்கு உதட்டு முத்தம் தருவது போன்று வெளியான புகைப்படத்தால் பிரச்சினையில் சிக்கிய அனிருத், தற்போது ஆபாசப்பாடலை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளார்.
இது குறித்து சென்னை ஹைகோர்ட்டில், வக்கீல் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆபாசப்பாடல்....
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர், தான் இசையமைத்துள்ள ‘ஆபாச' ஆங்கில பாடலை கடந்த 16-ந் தேதி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் காட்சிகள் ‘யு டியூப்' இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கிறது...
இந்த பாடல் வரிகள், பெண்களையும், பெண் சமுதாயத்தையும் அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்யும் விதமாக உள்ளது. குறிப்பாக தாய்மையை கடுமையான ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. பல மதத்தினரால் தெய்வமாக கருதப்படும் பெண்களை குறிவைத்து, இந்த ஆபாச வீடியோ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் அங்கீகாரம் இல்லை...
மேலும், இந்த வீடியோ காட்சிக்கு சென்சார் வாரியத்திடம் அங்கீகாரம் பெறவில்லை. மேலும், இதுபோன்ற ஆபாச பாடல் வீடியோ காட்சிகள், இந்திய தகவல் தொடர்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். எனவே இந்த ஆபாச வீடியோவை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

விசாரணை....
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்குப் பதிவுக்கு உத்தரவு...
அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் பிறப்பித்த தீர்ப்பில், புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், உடனே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. எனவே இந்த வழக்கில் மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றசாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக, மனுதாரர் மீண்டும் இந்த ஹைகோர்ட்டை நாடும் நிலையை போலீசார் ஏற்படுத்தக்கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











