அனிருத்தின் கான்செர்ட் ஒத்திவைப்பு.. இதுதான் காரணமா?.. ரசிகர்கள் கடும் அப்செட்
சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக கூலி, ஜன நாயகன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் நடத்தவிருந்த கான்செர்ட் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அனுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.
முன்னணி ஹீரோக்களுக்கு இசை: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் தடம் பதித்த அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
அனிருத்தின் சம்பளம்: அனிருத்தை பொறுத்தவரை தமிழில் வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அவரது இசையமைப்பில் இந்தியன் 2, விடாமுயற்சி, தேவரா என வரிசையாக படங்கள் வெளியாகின. அடுத்தடுத்து கூலி, ஜன நாயகன் படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. படு பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் அனி; சம்பளமாக 10 கோடி ரூபாய்க்கும் மேல் வாங்குகிறார் என்றும் சொல்லபடுகிறது.
கான்செர்ட்டிலும் பிஸி: சினிமாவுக்கு இசையமைப்பது ஒருபக்கம் இருக்க; இன்னொருபக்கம் கான்செர்ட் நடத்துவதிலும் மும்முரமாக இருக்கிறார். வெளிநாடு, உள்நாடு என பறந்து பறந்து கச்சேரி செய்யும் அவர்; ஜூலை 26ஆம் தேதி சென்னையில் Hukum Chennai Concert என்ற பெயரில் இசை கச்சேரி நடத்துவதாக இருந்தார். ரசிகர்களும் அந்த கான்செர்ட்டை பார்ப்பதற்காக உச்சக்கட்ட ஆர்வத்தில் இருந்தார்கள்.
கான்செர்ட் ஒத்திவைப்பு: இந்நிலையில் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "டிக்கெட் டிமாண்டுகள் மற்றும் இன்னும் சில காரணங்களால் ஜூலை 26ஆம் தேதி திருவிடந்தையில் நடக்கவிருந்த Hukum Chennai Concert ஒத்திவைக்கப்படுகிறது.இந்த கான்செர்ட் வேறு ஒரு தேதியில், வேறு இடத்தில் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும். இப்போது டிக்கெட் வாங்கியிருப்பவர்களின் பணம் இன்னும் 7லிருந்து பத்து வேலை நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். கான்செர்ட் தள்ளி போயிருப்பதால் ரசிகர்கள் அப்செட்டாகியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











