கேரளாவில் அஞ்சான்.. 100 அரங்குகளில் வெற்றிகரமான இரண்டாவது வாரம்!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் கேரளாவில் 100 அரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் முன்னணி நடிகர்களுக்குக் கூட கிடைக்காத ஆரம்ப வசூலை சூர்யாவின் அஞ்சான் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. உலகமெங்கும் 1400 அரங்குகளில் அஞ்சான் வெளியானது.
இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் ஆரம்ப வசூல் அபாரமாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். சூர்யா படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் அஞ்சானுக்குத்தான்.
இந்த நிலையில், கேரளாவில் இந்தப் படம் பிரமாண்டமாய் வெளியானது. இரண்டாவது வாரத்திலும் 100 அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் இதே அளவு அரங்குகளில் ஓடும் என்று கேரள விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
ஓணம் பண்டிகையையொட்டி, மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், அஞ்சான் படம் இத்தனை அரங்குகளில் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேர காட்சிகள் குறைக்கப்பட்டு ட்ரிம்மாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











