அடுத்த வாரம் சென்னை வருகிறார் அஞ்சலி... களஞ்சியம் படத்தில் நடிப்பாரா?

சித்தி கொடுமை, 'கருங்காலி' இயக்குநர் களஞ்சியம் மிரட்டல் என்றெல்லாம் ஏகப்பட்ட புகார்களை அள்ளிவிட்டு, திடீர் தலைமறைவாகி, 5 நாட்கள் கழித்து வெளியில் வந்த அஞ்சலி, இப்போது மீண்டும் படப்பிடிப்புகளில் வழக்கம் போல பங்கேற்று வருகிறார்.
ஹைதராபாத் போலீஸில் சமீபத்தில் ஆஜராகி, தான் காணாமல் போனதற்கான விளக்கங்களைச் சொல்லிவிட்டு வந்துள்ள அஞ்சலி, அடுத்து சென்னை நீதிமன்றம் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.
இப்போது புனேயில் போல்பச்சன் படப்பிடிப்பில் உள்ளார் அஞ்சலி. இன்னும் 5 தினங்களில் புனே ஷெட்யூல் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு அவர் சென்னை வருவார் என்றும் அஞ்சலி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், களஞ்சியத்தின் அடுத்த படமான ஊர் சுற்றிப் புராணத்தில் ஏற்கெனவே 10 நாட்கள் நடித்துள்ளார் அஞ்சலி. இன்னும் 10 நாட்கள் நடிக்க கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். அதன்படி நடித்துக் கொடுக்காவிட்டால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறி, அஞ்சலிக்கு தடை விதிக்க முயற்சிப்பேன் என களஞ்சியம் கூறி வருவதால், அஞ்சலி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை கவனித்து வருகிறது கோலிவுட்!


Click it and Unblock the Notifications











