'பெத்த மகளை கட்டி அணைக்கக் கூட முடியவில்லையே..' தனிமைப்படுத்தப்பட்ட பிரபல நடிகை உருக்கம்!
கொச்சி: தனது மகளை கட்டிப்பிடிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறேன் என்று பிரபல நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மலையாளப் படம், டிஜிபூட்டி. இதை, 'உப்பும் மிளகும்' படத்தை இயக்கிய எஸ்.ஜே.சினு இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பிடிப்புக்காக, 70 பேர் கொண்ட குழுவினர் ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிபூட்டி என்ற சிறிய நாட்டுக்கு மார்ச் 5 ஆம் தேதி சென்றனர்.

உண்மை சம்பவம்
இந்தப் படத்தை, அந்த நாட்டில் செட்டிலாகி இருக்கும், ஜோபி பி சாம் என்பவரும் அவர் மனைவியும் தயாரிக்கின்றனர். அந்த இடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. அதனால் படத்துக்கு அந்த நாட்டின் பெயரையே டைட்டிலாக வைத்துள்ளனர். அந்த நாட்டிலேயே படப்பிடிப்பை, நடத்தினால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் அங்கு சென்றனர்.

கொரோனா தீவிரம்
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதுதான் கொரோனா தீவிரம் அடைந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியே முடிந்தது. 21 ஆம் தேதி அவர்கள் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். லாக்டவுன் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், உடனடியாக கேரளாவுக்குத் திரும்ப முடியவில்லை.

விசா காலம்
தயாரிப்பாளர் ஜோபி பி சாம், அவர்களுடைய செலவுகளை கவனித்துக் கொண்டார். இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சினு, இங்கு மருத்துவ வசதிகள் இல்லை. எங்கள் குழுவில் 18 மாத குழந்தை முதல் 60 வயதை தாண்டிய முதியவர்கள் வரை இருக்கிறார்கள். விசாக்காலம் முடிந்துவிட்டது. இதனால் அரசு தலையிட்டு தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

சிறப்பு விமானம்
இந்நிலையில், அவர்கள் அனைவரும் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம், கடந்த 6 ஆம் தேதி கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் நடிகை அஞ்சலி நாயரும் ஒருவர். இவர் தமிழில், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்துபோகும் படங்களில் நடித்தவர்.

சிக்கிக் கொண்டேன்
அவர், ஆசை ஆசையாக நாடு திரும்பியும் பெற்ற மகளை கட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: வெறும் 15 நாள் ஷூட்டிங் என்று அந்த நாட்டுக்குச் சென்றேன். ஆனால் இரண்டு மாதங்களாக அங்கு சிக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இதனால் என் மகளை காணாமல் தவித்தேன்.

அதிர்ஷ்டசாலி
ஊருக்கு வந்ததும் அதே மனநிலையில்தான் இருக்கிறேன். என் மகள் ஆவனியை (Aavani) தொடவும் கட்டிப்பிடிக்கவும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் முடியவில்லை. இருந்தாலும் சில தாய்மார்களை விட நான் அதிர்ஷ்டசாலிதான். சிலர், தங்கள் குழந்தைகளிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும்போது நான் என் மகளை அருகில் இருந்து பார்ப்பது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

அறைக்குள் நுழைந்தேன்
பலத்த கெடுபிடிகளுக்கு இடையில்தான் நாங்கள் நாட்டுக்குத் திரும்பினோம். வீட்டுக்கு வந்ததும் உப்பு மற்றும் டெட்டால் கலந்த தண்ணீரால் என் அம்மா கைகளையும் கால்களையும் கழுவச் சொன்னார். இதற்கு பின் அம்மாவையும் என் மகளையும் தொடாமல் என் அறைக்குள் நுழைந்தேன். எனது மூடிய அறைக்குள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளேன். இதை கண்டிப்பாக தொடர்வேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











