நெஞ்சே அடைக்குது; நீட்டுக்கு எதிரான போராட்ட வடிவம்! அஞ்சாமை படம் பார்த்த பிரபலங்கள் சொல்வது என்ன?
சென்னை: இயக்குனர் சுப்புராம் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரஹ்மான் ஆகியோர் நடிப்பில் இன்று அதாவது ஜூன் 7ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் அஞ்சாமை. நீட் தேர்வினால் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் நிலையை உண்மைக்கு நெருக்கமாக படமாக்க முயற்சித்துள்ளது அஞ்சாமை படக்குழு.
படம் எப்படி இருக்கு?
படத்திலே பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் இந்தப் படம் சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறது என கூறி வருகின்றனர். கடந்த நான்காம் தேதி 18 வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானது. அன்றைய தினத்திலேயே நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது. நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வினால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் நிலையை படமாக்கியுள்ள அஞ்சாமை படத்தினை பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் சொல்வது என்ன?
அதில் நடிகை ஜனனி ஐயர், சமூகக் கருத்து கொண்ட இது போன்ற படங்களை பார்க்கையில் மிகவும் திருப்திகரமாக உள்ளது. இந்தப் படத்தில் எனது நண்பர்களான விதார்த்தும் வாணி போஜனும் அருமையாக நடித்துள்ளனர். சமூகத்திற்கு தேவையான கருத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட அஞ்சாமை திரைப்படத்தின் முதல் பாதி சென்டிமென்ட் நிறைந்ததாகவும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

உயிரைக் கொடுத்து படிக்க வேண்டியதில்லை
அதேபோல் நடிகர் ஆரி, "இந்தப் படம் பார்த்தபோது எனக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. இந்த படம் நமது வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்ன மாதிரியான அரசியல் சூழலில் நமது குழந்தைகளின் வாழ்க்கை சிக்கி உள்ளது, இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார் என்று கோபத்தின் வெளிப்பாடு தான் அஞ்சாமை திரைப்படம். நீட் தேர்வினால் நமது சமூகத்தில் பல ஆண்டுகளாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு நடக்கும் போது பல மரணங்களையும் பல பெற்றோர்களின் துன்பங்களையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாடம் படிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை இன்றைய சூழலில் எப்படி உள்ளது என்பதை அஞ்சாமை திரைப்படம் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கேள்வியும் கேட்டுள்ளது. உயிரைக் கொடுத்து படிக்க வேண்டியதில்லை உயிர் வாழ்வதற்கு படிக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் ஆழமாக அஞ்சாமை திரைப்படம் விளக்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றெல்லாம் கூறுகிறார்கள் ஆனால் ஒட்டுமொத்த நாட்டிலும் பயிலும் மாணவர்கள் ஒரே மாதிரியான கல்வியை பயில்கின்றனரா என்பதை அஞ்சாமை படம் கேள்வி எழுப்புகின்றது. கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகிவிட்டது. படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய ராயல் சல்யூட்" என குறிப்பிட்டுள்ளார்.

நீட்டுக்கு எதிரான போரட்ட வடிவம்
அதேபோல் நடிகரும் இயக்குநருமான தமிழ் அஞ்சாமை படத்தை பார்த்துவிட்டு, "படம் ரொம்பவே நல்லா இருக்கிறது. நீட்டுக்கு எதிரான பல போராட்டங்கள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு திரைப்படம் வந்துள்ளது. இன்றைக்கு மாணவர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் இந்த படம் பேசுகிறது. நீட் என்பது அரசியல் தளத்தை கடந்து இன்றைக்கு சினிமா தளத்திற்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











