தாய் கிழவி படத்தை பாராட்டிய பாஜக அண்ணாமலை.. ராதிகாவுடைய ரிப்ளை என்ன தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் தாய் கிழவி. அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலிலும் படம் சக்கைப்போடு போடுகிறது. படத்தை பார்த்துவிட்டு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பாராட்டிய அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தாய் கிழவி படத்தால் ஈர்க்கப்பட்ட தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "அன்புள்ள அக்கா, திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களுக்கு, தங்கள் அற்புதமான நடிப்பில் வெளியாகியிருக்கும், 'தாய் கிழவி திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பவுனுத்தாயாக வாழ்ந்து, எங்கள் மனங்களை எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறீர்கள்.

விரும்பி பார்ப்பதுண்டு: பொதுவாகவே, சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைக் கூறும் திரைப்படங்கள், இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் திரைப்படங்கள், நமது கிராமங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் திரைப்படங்கள், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. அவற்றில் ஒரு சில திரைப்படங்களைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் உண்டு. அந்த வகையில், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், பொருளாதாரத் தற்சார்பு பெற்றிருக்க வேண்டியதின் அவசியத்தைக் கூறும் தங்களின் 'தாய் கிழவி' திரைப்படம் குறித்து நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
தனி முத்திரை: நான் சிறுவயது முதலே திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் குடும்பத்துடன் கண்டு ரசித்து வியந்து வளர்ந்த உங்கள் கலைத்திறன் குறித்து எழுதும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கிறது என்று நான் எண்ணவில்லை. திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான, நடிகவேள், ஐயா எம்.ஆர்.ராதா அவர்களின் மகளாக இருந்தும், உங்களுக்கென தனிப் பாதையை வகுத்து, சுய அடையாளத்தை உருவாக்கி, கலைத்துறையில் இன்று 50ஆவது ஆண்டினை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை விதமான கதாபாத்திரங்கள்; எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தனது தனி முத்திரையைப் பதித்தே வந்திருக்கிறீர்கள்.
நடிப்பை பார்த்து வியந்தோம்: சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் போல, உலக நாயகன் திரு. கமலஹாசன் போல, சுமார் மூன்று தலைமுறைகளை தனது நடிப்புத் திறனால் ஈர்த்திருக்கிறீர்கள். அது அத்தனை எளிதான விஷயமல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். திரைப்படங்களில் மட்டுமின்றி, எங்கள் பள்ளி, கல்லூரிக் காலங்களில் சின்னத் திரையிலும் சித்தியாக, ராணியாக, உங்கள் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறோம். நீங்கள் தாய் கிழவி திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அண்ணன் திரு. சரத்குமார் அவர்களைச் சந்திக்க பல முறை உங்கள் இல்லத்துக்கு வந்தபோது, தாய் கிழவி திரைப்படம் குறித்து பேசும்போதெல்லாம், அத்தனை மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் பேசிக் கொண்டிருப்பீர்கள்.
நேரிலேயே பார்த்திருக்கிறேன்: இந்த திரைப்படத்துக்காக கடினமான மேக்கப் காரணமாக ஏற்பட்ட உபாதைகள் மற்றும் காலில் அறுவைசிகிச்சை செய்ய நேரிட்டும், அவற்றை எல்லாம் கடந்து, இந்தத் திரைப்படத்துக்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பை நேரில் கண்டிருக்கிறேன். அனுபவமிக்க, மிகத் திறமை வாய்ந்த ஒரு கலைஞர், தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால், உங்களது கலைப்பயணம், ஐம்பது ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருப்பதில் யாருக்கும் ஆச்சரியம் எழாது. மேலும் பலப்பல ஆண்டுகள், நீங்கள் கலைத்துறையிலும், மக்கள் பணியிலும் சாதிக்க வேண்டுமென்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இயக்குநருக்கு வாழ்த்துகள்: தாய் கிழவி திரைப்படம், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை. தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு. நகைச்சுவையிலும் குறையில்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில், சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இளம் இயக்குநர் திரு. சிவகுமார் முருகேசன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகம் சார்ந்த மேலும் பல அற்புதமான திரைப்படங்களை அவர் தொடர்ந்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வணிக நோக்கம் மட்டும் இல்லாமல், மிகச் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து திரைப்படங்களாக உருவாக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், சகோதரர் திரு. சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரது வெற்றிகள் தொடர, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கும் திரு. நிவாஸ் பிரசன்னா அவர்கள், நடிப்பை மேலும், அற்புதமான வெளிப்படுத்தியிருக்கும் அனுபவமிக்க கலைஞர்களான அண்ணன் திரு சிங்கம்புலி, அண்ணன் திரு. இளவரசு, அண்ணன் திரு. அருள்தாஸ், அண்ணன் திரு. முனீஷ்காந்த், சகோதரர் திரு பால சரவணன், சகோதரி ரேச்சல் ரெபேக்கா மற்றும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் அனைத்துக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும், எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில், மகிழ்ச்சியடைகிறேன். தாய் கிழவி திரைப்படம், தேசிய அளவில் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். சமூகம் சார்ந்த திரைப்படங்கள் பல வெளிவர, அது நிச்சயம் உந்துதலாக அமையும்" என குறிப்பிட்டிருந்தார்.
ராதிகாவின் நன்றி: அதற்கு ராதிகா தனது எக்ஸ் பக்கத்தில், "அன்புள்ள சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி. தாய்கிழவி திரைப்படம் குறித்த தங்களது ஆழமான கருத்து பதிவுடன் கூடிய கடிதத்தைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். சமூக மாற்றத்திற்குத் தேவையான கருத்துகளை முன்வைத்து, பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரியத் திரைக்கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட "தாய்கிழவி" திரைப்படத்தை தாங்கள் நேரம் ஒதுக்கி பார்வையிட்டு, மனம் திறந்து பாராட்டியது எனக்கும், திரைப்படக்குழுவினருக்கும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் அளிக்கிறது. சமூக பொறுப்புணர்வுடன் கூறப்பட்ட உங்கள் வார்த்தைகள், இந்த முயற்சியின் அர்த்தத்தையும் மதிப்பையும் மேலும்உயர்த்துகிறது. ஒட்டுமொத்த படக்குழுவினர் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















