பீஸ்ட் படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புக்கள்...என்ன செய்ய போகிறது படக்குழு ?
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் அரசு தடை விதித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நேற்று எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு இஸ்லாமிய அமைப்பும் பீஸ்ட் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சித்தரிப்பதை போலவும், பயங்கரவாதம் அல்லது வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி குவைத் சென்சார் போர்டு கூறியதை அடுத்து அந்த நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்தது.

மற்றொரு அமைப்பும் எதிர்ப்பு
அதே சமயம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பதை கண்டித்து பீஸ்ட் படத்திற்கு இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய லீக் கட்சியும் இன்று பீஸ்ட் படத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜய் மறந்திருக்க மாட்டார்
அந்த அறிக்கையில், துப்பாக்கி திரைப்படத்தில் உயர்நீதிமன்றம் மூலம் வாங்கிய அடியை நடிகர் விஜய் மறந்து இருக்க வாய்ப்பில்லை. பீஸ்ட் திரைப்படமும் துப்பாக்கி திரைப்படம் போல இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எச்சரிக்கிறோம். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட துப்பாக்கி திரைப்படத்தை சுமார் மூன்று முறை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மினி திரையரங்கில் நீதியரசர்கள் ஆர். பானுமதி மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இப்படி செய்வது சரியல்ல
இது போன்ற மாஸ் ஹீரோ நடிக்கும் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பது கண்டிக்கதக்கது. திரைப்பட தணிக்கை குழு எப்படி இதுபோன்ற திரைப்படம் எடுக்க அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பினார்கள் நீதியரசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக குவைத் நாடு தடை விதித்து உள்ளதாக செய்திகள் வருகிறது.

துப்பாக்கிக்கே வழக்கு
காவியை கிழிப்பது போன்ற காட்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகளில் வைத்து விட்டு இப்போது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் அமைத்து இருப்பது கண்டிக்கதக்கது. ஏற்கனவே இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக துப்பாக்கி திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் வீ ட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினோம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இயக்குனர், நடிகர் ஆகியோர் கண்டனத்திற்கு ஆளாகின்றனர் என்பதை மறந்து மீண்டும் முஸ்லிம்களை குறி வைத்து தீவிரவாதிகளாக காட்சிகள் அமைத்து திரைப்படம் எடுத்து உள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

விஜய்க்கு எச்சரிக்கை
பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு திரைப்படத்தை பார்த்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருந்தால் நடிகர், இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பதும் , விஜய் வீ ட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தவும் இந்திய தேசிய லீக் கட்சி தயாராக உள்ளது என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











