Vijayakanth - விஜயகாந்த்தை பார்க்க வடிவேலு வருவாரா? மாட்டாரா? வந்தா அடி விழும்.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் சூழலில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வருவாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில் வடிவேலு விஜயகாந்த்தை பற்றி தரக்குறைவாக பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது. அப்போதிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.
விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக அவர் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாடையும் சோகக்கடலில் தள்ளியிருக்கிறது. அவரை கடைசியாக பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இன்று இறுதிச்சடங்கு: தீவுத்திடலில் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. மதியம் ஒரு மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் அங்கிருந்து தொடங்கி தேமுதிக தலைமை அலுவலகத்தில் முடிவடைகிறது. மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அந்த அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை பாதுகாப்பும் பன்மடங்கு போடப்பட்டிருக்கிறது.
பிரபலங்கள் அஞ்சலி: இதற்கிடையே விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலைவரை வைக்கப்பட்டிருந்தது. அப்போது விஜய், இளையராஜா, சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் வந்து விஜயகாந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். தீவுத்திடலுக்கும் பல பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் விஜயகாந்த் வளர்த்துவிட்டவர்களில் ஒருவரான வடிவேலு இப்போதுவரை அஞ்சலி செலுத்துவதற்கு வரவில்லை.
என்ன காரணம்: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். அப்போதிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே ஒரு கார் நிறுத்தப்பட்ட பிரச்னையில்தான் இருவருக்கும் முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வடிவேலு வருவாரா மட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
அதேசமயம் என்னவாக இருந்தாலும் வடிவேலு வர வேண்டும் என ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அவர் தொண்டர்கள், ரசிகர்கள் எல்லாம் உச்சக்கட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்போது அவரால் எப்படி வர முடியும் என மறுதரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் ஒரு இரங்கல் குறிப்பையாவது வடிவேலு வெளியிட வேண்டியதுதானே என்ற கேள்வியும் எழுகிறது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது அவரிடம்; விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வராதது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர் வடிவேலு வரமாட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
பிச்சு எடுத்துடுவாங்க: ஏனெனில் விஜயகாந்த்தை வடிவேலு ரொம்பவே தரக்குறைவாக பேசிவிட்டார். அதனை விஜயகாந்த்தின் ரசிகர்களோ, தொண்டர்களோ இன்னமும் மறக்கவில்லை. அவர்கள் எல்லாம் இன்று உச்சக்கட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இருப்பார்கள். இந்த சமயத்தில் அஞ்சலி செலுத்த வடிவேலு வந்தால் கண்டிப்பாக அவரை பிச்சு பிச்சு எடுத்துடுவாங்க என்பதுதான் உண்மை.
கண்ணீர் வீட்டிருப்பார்: விஜயகாந்த் எப்போதும் எளிய மனிதர்களிடம் அன்பு காட்டியவர். வடிவேலு வளர்ந்தபோது விஜயகாந்த் அவரிடமும் அப்படித்தான் நடந்துகொண்டார். ஏதோ ஒரு காரணத்தால் அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது. இருந்தாலும் தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்த்தை நினைத்து வடிவேலு கண்டிப்பாக இரண்டு சொட்டு கண்ணீராவது விட்டிருப்பார்" என்றார்.
முன்னதாக வடிவேலு தன்னை தரக்குறைவாக பேசினாலும் அவருடன் பழகியவர்களை சந்திக்கும்போதெல்லாம், வடிவேலுவை தொடர்ந்து நடிக்க சொல்லுங்க ப்பா.. அவர் பிறவி நடிகர் என்று விஜயகாந்த் சொல்லிக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











