விஜய்க்கு எதிராக களமிறங்கும் வடிவேலு.. அவருக்கு இது தேவையில்லாத வேலை.. விளாசிய பிரபலம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராக ஸ்டாலின் அரியணையில் அமர்வார் என்று பேசி இருந்தார். சில ஆண்டுகள் அரசியல் பற்றி பேசாமல் இருந்த வடிவேலுவை திமுக, விஜய்க்கு எதிராக களமிறக்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய வலைபேச்சு அந்தணன், பொதுவாக சினிமாக்காரர்கள் பேசுவதை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடியே பேசுவார்கள். அதுவும் வடிவேலுவை பற்றி சொல்லவே வேண்டாம். அவர், திமுக அரியணை ஏற வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் பேசினார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டு பலமுறை கடிதம் எழுதி, நான் பேசியது தவறு, என்னை மன்னித்து விடுங்கள்,உங்களை சந்திக்க வேண்டும் என்று பல முறை கடிதம் எழுதினார். ஆனால், அதை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை, இதனால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்து போனது.

வடிவேலுக்கு தேவையில்லாத வேலை: இப்போது வடிவேலு மீண்டும் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதற்கு காரணம் என்னவென்றால், சினிமா துறையில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திமுகவிற்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து ஒருவர் பேசினால், நன்றாக இருக்கும் என்பதால் வடிவேலுவை களமிறக்க நினைக்கிறார்கள். ஆனால், இது வடிவேலுவிற்கு தேவையில்லாத ஒன்று. வடிவேலு போன்ற கலைஞர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அவர் எந்த கட்சியையும் சார்ந்தவராக இருக்கக்கூடாது.
தேவையில்லாத பேச்சு: 2011 சட்டமன்ற தேர்தலில் விஜய்காந்த் பற்றி மோசமாக பேசினார் வடிவேலு, அதற்கு காரணம் விஜய்காந்திற்கும் வடிவேலுவிற்கும் பகை இருந்தது. அந்த பகையை திமுக கட்சியுடன் சேர்ந்து தீர்த்துக்கொண்டார். ஆனால், விஜய் விஷயத்தில் வடிவேலு அப்படி நடந்து கொள்ள மாட்டார். அதற்கு காரணம் வடிவேலு விஜய்யுடன் நடித்த போது இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இதனால், விஜய்காந்தை பேசியதைப் போல விஜய்யை வடிவேலு பேச மாட்டார். இன்னும் 50 வருடமும், உதயநிதி ஸ்டாலின் தான் என்று பேசியது எல்லாம் சந்தர்ப்பவாத பேச்சு தான். நாளை வேறு ஆட்சி வந்தால், இதே வடிவேலு வேறு மாதிரி பேசுவார். இதனால், நடிகர்கள் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு ஒரு ஆதாயம் தேவைப்படும் அதற்காக பேசுவார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











