துணை தேடும் முதுமை... எந்த வயதிலும் காதல் வரும் - அனுபம் கெரின் கீர் சொல்லும் உண்மை
சென்னை: குறும்படம் என்பது கவிதை. இரண்டரை மணிநேரத்தில் சொல்ல முடியாத கதையைக் கூட பத்து நிமிடத்தில் சொல்லிவிடுகின்றனர் இன்றைய திறமைசாலி இயக்குநர்கள். 'கீர்' என்ற குறும்படமும் அப்படிப்பட்ட கவிதை போன்றதுதான். அனுபம் கெர் நடித்துள்ள இந்த குறும்படம் வயோதிக காலத்தில் தனிமையை பற்றியும், தங்களுக்கும் தோழமையாக பேச ஒரு துணை தேவை என்பதையும் சொல்லுகிறது.

வேலையில் இருந்த ஓய்வு பெற்ற அனுபம் கெர் தன்னுடன் வேலை செய்த ஆதரவற்ற ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அந்த பெண் அந்த வீட்டை அழகாக மாற்றுகிறார். சமைக்கிறார், அனுபம்கெருக்கு உற்ற தோழியாக துணையாக இருக்கிறார்.

தாத்தா அனுபம் கெர் வீட்டிற்கு வரும் பேரன் பேத்திகளுக்கு அந்த புதிய பெண் யார் என்ற கேள்வி எழுகிறது. இவர் யார் என்று கேட்க, என்னுடைய தோழி என்கிறார். தோழியா? பெண் தோழியா என்று அண்ணனும் தங்கையுமாக பேசிக்கொள்கின்றனர். பாட்டி இருந்த இடத்தில் அந்த தோழியா? என்று யோசிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு கீர் செய்து கொடுக்கிறார் அந்த பெண். வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணை தேவை என்பதை அந்த சிறுவர்களுக்கு புரிய வைக்கிறார். கூடவே தனது மகளுக்கு இந்த விசயம் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று நினைக்கிறார். பேத்தி கேட்ட கேள்வியை அனைவரும் கேட்பார்களோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்கிறது. முதுமையில்தான் துணை தேவை. அன்பும் அரவணைப்பும் அவசியம் என்பதை இந்த கீர் குறும்படம் உணர்த்துகிறது. கீர் நாவில் மட்டுமல்ல மனதிலும் கவிதையாய் இனிக்கிறது. 2017 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான இந்த படத்திற்கு அதே ஆண்டில் சர்வதேச விருது கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











