சிறுநீரகக் கோளாறு.. இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. பிரபல பாடகியின் மகன்.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: சிறுநீரகக் கோளாறு காரணமாக பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.
பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வல். இந்தியில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்பட வேற்று மொழி படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
தமிழில், அருண் விஜய்யின் 'பிரியம்' படத்தில், தில் ரூபா தில் ரூபா, 'கனவே கலையாதே' படத்தில் இடம்பெற்ற பூசு மஞ்சள் பூசு மஞ்சள் உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கமல்ஹாசன் ஏக் துஜே கேலியே படத்தில், மேரே ஜீவன் சாத்தி பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளார்.

பத்மஸ்ரீ விருது
இவர் கடந்த 2017-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது கணவர் அருண் பட்வல். இவர் இசை அமைப்பாளர். இவர்களுக்கு ஆதித்யா பட்வல் (35) என்ற மகனும், கவிதா பட்வல் என்ற மகளும் இருந்தனர். ஆதித்யா பட்வல் இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான தாக்கரே படத்துக்கு அவர் இசை அமைத்திருந்தார்.

உடல் நலம் பாதிப்பு
நவாஸுதின் சித்திக் நடித்திருந்த இந்தப் படம் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பயோபிக். இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று நலமுடன் இருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

சங்கர் மகாதேவன்
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆதித்யா பட்வல் மறைவுக்கு பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர், பாடகரும் இசை அமைப்பாளருமான சங்கர் மகாதேவன் உள்பட ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications