சென்னையை விட்டு மும்பை போன சூர்யா.. மும்பையை விட்டு வெளியேறும் மகாராஜா பட நடிகர்.. என்ன ஆச்சு?
மும்பை: நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பைக்கு தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று குடியேறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நடிகர் சூர்யா கோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மும்பைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறும் போது, தனது அம்மா மற்றும் அப்பாவை கொஞ்ச நாள் பார்த்துக் கொள்ள முடிவெடுத்து அங்கே சென்றோம் எனக் கூறினார்.
தென்னிந்திய நடிகைகள் பலரும் மும்பைக்கு சென்று புதிதாக வீடுகளை வாங்குவது, ஸ்டூடியோ க்ரீன் அங்கே ஆபிஸ் போட்டு கங்குவா படத்திற்காக புரமோஷன் செய்தது. இயக்குநர் அட்லீ மும்பையில் தயாரிப்பாளராக மாறியது என ஏகப்பட்ட புலம்பெயர் விஷயங்கள் நடைபெற்று வரும் நிலையில், அனுராக் காஷ்யப் தற்போது அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பைக்கு படையெடுக்கும் பல நடிகர்கள் இங்கே ஸ்டாராக வேண்டும் என ஏஜென்சிகளை நம்பி ஏமாந்து போவதாகவும் இங்கே நடப்பது கலை அல்ல காசு பார்க்கும் பிசினஸ் மட்டுமே நடக்கிறது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் இதுபோன்று நடப்பது கிடையாது. மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற ஒரு படத்தை எல்லாம் இந்தியில் உருவாக்கவே முடியாது என விளாசியுள்ளார்.
மகாராஜா வில்லன்: நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விஜய்யின் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனம் தற்போது சீனா வரை அவரை கொண்டாட வைத்துள்ளது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ரைஃபிள் கிளப் படத்தின் மூலம் அங்கேயும் அறிமுகமாகி உள்ளார் அனுராக் காஷ்யப்.
மும்பை விட்டு வெளியேற போகிறேன்: மும்பை தான் இந்தியாவின் சினிமா சிட்டியாக இருந்து வந்த நிலையில், டோலிவுட் சினிமா சமீபத்தில் பாலிவுட்டை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்குத் தள்ளியது. தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து படங்கள் பண்ணுவதும் மற்றும் தென்னிந்திய இயக்குநர்கள் படங்களில் நடிப்பது மட்டுமே பாலிவுட் சமீப காலமாக செய்து வருகிறது என்றும் கிரியேட்டிவ் ஐடியாக்களே இல்லை. கிரியேட்டர்களுக்கு இங்கு வேலையில்லை. ஏஜென்சிகள் நடிகர்களை ஸ்டார்களாக்கும் பணியை செய்கின்றன. க்ளிக் ஆனால், ஸ்டார் இல்லை என்றால் தூக்கி வீசப்படுவீர்கள் என்கிற முறை இங்கே பலரையும் பாதித்து வருகிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள அனுராக் காஷ்யப் விரைவில் மும்பையை விட்டு வெளியேறப் போகிறேன் என்றும் நண்பர்கள் என நினைத்துக் கொண்டிருந்த சில நடிகர்களும் தன்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.
தென்னிந்தியா தான் இனிமேல்?: தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வரும் அனுராக் காஷ்யப். சிறு பட்ஜெட் படங்கள் கூட இங்கே ஓடக் காரணம் புதிய முயற்சிகளை இங்கே பரிசோதித்து பார்ப்பது தான் எனக் கூறியுள்ளார். தென்னிந்தியா பக்கம் தான் அனுராக் காஷ்யப் 2025ல் குடியமர போகிறார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் தனது மகள் ஆலியா காஷ்யப்புக்கு மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











