பில்டிங் கட்டணும்.. காசு வேணும்... கமல், ரஜினி வர்றாங்க.. கிரிக்கெட் ஆடப் போறோம்: நடிகர் சங்கம்!
சென்னை: வருகின்ற ஏப்ரல் 10 ம் தேதி சென்னையில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் சார்ந்த் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஷால் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறும்போது "நடிகர் சங்கத்திடம் ரூ.48 லட்சம் இருப்புத் தொகையாக இருந்தது. மேலும் ரூ.2 கோடி கடன் வாங்கி மொத்தம் ரூ.2 கோடியே 48 லட்சம் செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம்.
தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கட்டிட நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.
இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரை உலகினரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது, கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். இதற்காக முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டிருக்கிறது" என்று விஷால் தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











