திருடன் என பட்டம் வாங்க எங்க அம்மா என்னை பெத்துவிடவில்லை… கொந்தளிக்கும் ஏஆர்.முருகதாஸ்!
சென்னை: சர்கார் கதை திருடப்பட்டது என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் .
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தாயாரித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.
செங்கோல் என தான் எழுதி எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்த கதையை முருகதாஸ் திருடி, சர்கார் என படமாக்கியுள்ளதாகவும், அதனால் அப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பிரச்சனை
நீதிபதி சுந்தர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது வரும் 30ஆம் தேதிக்குள் தென் இந்திய எழுத்தாளர் சங்கமும், சன்பிச்சர்ஸும் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தென் இந்திய எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 2007 ஆம் ஆண்டு வருண் பதிவு செய்த செங்கோல் கதை மற்றும் ஏஆர்.முருகதாஸின் சர்கார் கதை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன்படி இரண்டு கதைகளும் ஒன்றுதான் எனவும், இதுதொடர்பாக வருண் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இடையூறு செய்யமாட்டோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒரு ஆன்லைன் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ஏஆர்.முருகதாஸ் கதை திருட்டு விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர்கள் செங்கோல் கதையை படித்துள்ளார்கள் ஆனால் என்னுடய முழுக்கதையை அவர்கள் படிக்கவில்லை. நான் கொடுத்த ஆறு பக்க மூலக் கதையை மட்டுமே அவர்கள் படித்தார்கள். பவுண்டட் ஸ்கிரிப்டை படிக்கவில்லை. பாக்கியராஜ் சொல்வது ஒருதலை பட்சமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஒற்றுமை
செங்கோல் கதையில் சிவாஜி கணேசன் வாக்கை கள்ள ஓட்டாக போடுகின்றனர். சர்கார் கதையில் சுந்தர் பிச்சை போன்று வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவரின் வாக்கை கள்ள ஓட்டாக போடுகின்றனர். இந்த ஒருவிஷயத்தை மட்டும் வைத்து எப்படி இரண்டும் ஒரு கதை எனச் சொல்லலாம். பாக்கியராஜின் சின்ன வீடு திரைப்படமும், மணிவண்ணனின் கோபுரங்கள் சாய்வதில்லை படமும் ஒரே கதைக்களம் கொண்ட படம்தான். ஆனால் முதலில் வந்தது கோபுரங்கள் சாய்வதில்லை. அதனால் பாக்கியராஜ் மணிவண்னன் படத்தைப் பார்த்து காப்பியடித்தார் என சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்கிரிப்ட் படிக்கவில்லை
மொத்தம் 15 மெம்பர்கள் விசாரித்தார்கள். அதில் ஐந்து மெம்பர்கள் மட்டுமே இரண்டும் ஒரே ஸ்கிரிப்ட் என சொல்லியிருக்கிறார்கள். ஏழுபேர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, இரண்டுபேர் கருத்து தெரிவிக்கவில்லை அப்படி இருக்கும்போது மெஜாரிட்டி மெம்பர்கள் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்ததாக பாக்கியராஜ் எப்படி சொல்லலாம்? அதுவும் அப்பட்டமான பொய் என கூறியுள்ளார்.

வருண் தெரியாது
வருண் ராஜேந்திரன் 17 வருடங்களுக்கு முன் கதை எழுதியதாக சொல்கிறார். இரண்டு முதலமைச்சர் மறைவு, தமிழக அரசியலின் நிச்சயமற்ற சூழல், ரஜினி கமல் அரசியல் என்ட்ரி என இருக்கும் விஷயங்களை வைத்துதான் கதை பண்ணியிருக்கிறேன். இது எப்படி 17 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கதையில் இருக்கும்? வருண் ராஜேந்திரன் யாரென்றே எனக்கு தெரியாது. எனக்கும் அவருக்கும் பொதுவானவர் ஸ்டில்ஸ் ரவி, அவர் மூலம் இந்த கதை லீக்காகியிருக்கலாம் என சொல்கிறார்கள். ஆனால் அவரையும் விசாரிக்கவில்லை. பாக்கியராஜும் வருண் ராஜேந்திரனும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடரில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதனால் என்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதுபோல் உள்ளது என்றும் பாக்கியராஜ் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் எனவும் இயக்குனர் முருகதாஸ் ஆதங்கப்பட்டுள்ளார்.

18 வருடம்
பாக்கியராஜ் போன்றவர்களைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன், அதனால் அவர்கள் திருட்டுப் பட்டம் கொடுத்தால் வாங்கிகொண்டு அப்படியே போக முடியாது. அதற்காக என்னை எங்க அம்மா பெத்துவிடவில்லை. இங்கு பசியை அடக்கி, தூக்கத்தை அடக்கி, காமத்தை அடக்கி எல்லாத்தையும் அடக்கி தவ வாழ்க்கை வாழ்ந்து 18 வருடங்கள் போராடிய பிறகு அவர் கூப்பிட்டு திருடன் எனச் சொன்னால் அதை கேட்டு அமைதியாக போவதற்கு நான் தயாராக இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றும் போது இதுபோன்ற பிரச்சனை வருவதாகவும், விஜய் படம், விஜய்க்கு இருக்கும் மாஸ் போன்ற விஷயங்களால் இதுபோன்ற பிரச்சனை வருகிறது என நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











