வளர்ந்து வாங்க.. ரமணா பார்ட் 2 எடுக்கலாம்.. விஜயகாந்த் மகனுக்கு வாக்கு கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ்!
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் படைத் தலைவன். இந்த படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசும்போது, " கேப்டன் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பயன் அடைந்தவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். அவரால் இன்றைக்கும் பலர் தங்களது பசியை போக்கி வருகிறார்கள். கேப்டன் படத்தின் படப்பிடிப்புக்கு வருகிறார் என்றாலே, அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடி விடுவார்கள். அவரது கம்பீரம் வேறு எந்த நடிகருக்கு வரும்.

நான் அவருடன் ஒரு வருட காலம் பயணித்துள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினால், அதற்கு உடனே ஏன், டூப் போடுபவர்களுக்கு மட்டும் என்ன இரண்டு உயிர் உள்ளதா என்று கேட்டார். அவரைப் போன்ற ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. அதேபோல் ஒரு சண்டைக் காட்சியில் ரோப் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னபோது, நான் இதற்கு முன்னர் நடித்த படங்களில் ரோப் கட்டியதே கிடையாது. இந்த படத்தில் நான் ரோப் கட்டினால், அதற்கு முன்னர் நடித்த படங்களிலும் நான் ரோப் கட்டி நடித்ததாக நினைத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
கேப்டன் விஜயகாந்த்: அதேபோல் ரமணா படத்தில் இடம்பெற்ற மிக நீண்ட வசனங்கள் தொடங்கி அவரது டயலாக்குகள் அனைத்துமே அதிகபட்சம் இரண்டு டேக்குகள் மட்டும் தான் எடுத்துக் கொண்டார். ஒரு டயலாக்கை அதுவும் மிக நீண்ட டயலாக்கை எழுதுவது சுலபமான விஷயம். குறிப்பாக புள்ளி விவரங்களை தேடித் தேடி எழுதி விடலாம். ஆனால் அதனை ஒரே டேக்கில் பேசுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதுவும் புள்ளி விவரங்களை மிகவும் சரியாக சொல்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால் கேப்டன், மிக நீண்ட டயலாக்குகளை இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதனை ஒரே டேக்கில் பேசினார்.

ரமணா 2: அடையாறு, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் நம்பிக்கையாக இருந்தது கே[டன் ஒருவர் மட்டும்தான். படைத் தலைவன் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கம்பீரமான கதாநாயகன் கிடைத்துள்ளார். அவரை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் ஒரு யானையும் ஒரு சிங்கமும் நடித்து உள்ளது போல் உள்ளது. வளர்ந்து வாங்க சண்முக பாண்டியன் , ரமணா பாகம் இரண்டு எடுக்கலாம். கேப்டன் பலருக்கும் பல விஷயங்களைக் கொடுத்துள்ளார். அவர் உங்களுக்கு அவரது கண்களைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். அதற்காகவே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று கூறினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது. கேப்டன் விஜயகாந்த் , இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ரமணா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.


Click it and Unblock the Notifications











