ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?
சென்னை: இசைப்புயல் என்று கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசையமைப்பில் கடைசியாக தமிழில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பட்டையை கிளப்பின. இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது அவரது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது இசைக்கென்று பலரும் வெறிப்படித்தவர்களாக இருக்கிறார்கள். ரோஜாவில் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தினார். ஒவ்வொரு பாடலும் அவ்வளவு புதுமையாக இருக்கின்றனவே என்று ரசிகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர் வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்து சரசரவென்று உச்சத்துக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டிலும் கலக்கிய ரஹ்மான்: கோலிவுட்டில் மட்டும் கலக்கிய அவர் பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் அடித்துக்கொண்டிருந்த இசைப்புயல் மும்பையிலும் பலமாக அடிக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அளவில் அறியப்படும் இசையமைப்பாளராக மாறிய அவர்; ஏராளமான தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், சைமா விருதுகள் உள்ளிட்டவைகளை பெற்று அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
ஆஸ்கர்கள்: கோலிவுட், பாலிவுட்டில் கலக்கிய ரஹ்மான் ஹாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்கு இசையமைத்ததால் இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் க்ளோப் விருதுகள், கிராமி விருதுகள் என சர்வதேச விருதுகளையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் ஆஸ்கர் மேடையில் அவர் தமிழில் பேசியது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய மணிமகுடமாக இருந்தது. பலரும் அதற்கு வரவேற்பு கொடுத்தார்கள். இன்றுவரை அவரை ஆஸ்கர் தமிழன் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானுக்கு நெஞ்சு வலி: இப்போது இசையமைப்பில் படு பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. காலை 7.30 மணிக்கு அவர் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்; இதய மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஈசிஜி, ECO உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்; இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது உறுதியானால் அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இது ரஹ்மானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மனைவியுடன் விவாகரத்து: முன்னதாக, அவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு மகள், மகன் திரைத்துறையில் இசை துறையில் இருக்கிறார்கள். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ரஹ்மான் கடந்த வருடம் பேசுபொருளானார். அதாவது அவரும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்தார்கள். அந்த விஷயத்தை வைத்து ரஹ்மானை பலரும் இஷ்டத்துக்கு இன்னொரு பெண்ணுடன் இணைத்து வைத்து பேசினார்கள். ஆனால் அத்தனைக்கும் சாய்ரா பானு தரமான பதிலடி கொடுத்து அனைவரின் வாயையும் மூட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











