AR Rahman Concert: தொடர்மழை.. இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்த ஏஆர் ரஹ்மான்!
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் நீண்ட காலங்களுக்கு பிறகு சென்னையில் இன்று இசைநிகழ்ச்சி நடத்தவிருந்தார்.
சென்னை பனையூரில் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் இன்று பெய்த மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் நடக்கவிருந்த ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு: இசைப்புயல் என்றும் ஆஸ்கர் நாயகன் என்றும் கொண்டாடப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் புது வெள்ளை மழையாக பொழிந்த இந்த இசைப்புயல் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழில் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். சமீபத்தில் இவரது இசையில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மிகச்சிறந்த விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஏஆர் ரஹ்மான் சர்வதேச அளவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்தவகையில் நீண்ட காலங்களுக்கு பிறகு இன்றைய தினம் சென்னையில் இவரது இசை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. பனையூரில் திறந்தவெளி மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏஆர் ரஹ்மான் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மழை காரணமாக ரசிகர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான புதிய தேதி மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தின் தற்போதைய நிலையையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்க்ததில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பரவலாக மழை பெய்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிகமான தண்ணீர் தேங்கியுள்ளதையும் பார்க்க முடிந்தது.

இசைப்புயலின் இசைக் கச்சேரிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். 8 ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அதிகமான ஆர்வத்துடன் டிக்கெட்டுகளையும் புக் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, டிக்கெட் புக்கிங் செய்தவர்கள், அதே டிக்கெட்டுகளை கொண்டு வேறொரு நாளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











