ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது.. ஒரே ட்வீட்டில் ரசிகர்களின் மனங்களை வென்ற ஏ.ஆர். ரஹ்மான்!
சென்னை: 69வது தேசிய விருதுகள் வெற்றிப் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், கருவறை எனும் ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தி பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சக கலைஞர்களையும் இளம் கலைஞர்களையும் பாராட்ட எப்போதுமே ஏ.ஆர். ரஹ்மான் தவறியதே இல்லை. தேனிசை தென்றல் தேவாவுக்கே கிடைக்காத தேசிய விருது அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு கிடைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தன்னை விட தனது மகனுக்கு இந்த விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கருவறை எனும் ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா போட்ட கடுமையான உழைப்பு தான் அவருக்கு இப்படியொரு அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது என தேவா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா எல்லாம் குத்து பாட்டுக்கு பிரபலமானவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கமர்ஷியல் வெற்றி படங்களுக்கும் இந்த முறை தேசிய விருதுகள் வழங்கப்பட்டது சர்ச்சைகளை கிளப்பினாலும், அதற்கு அவர்கள் முற்றிலும் தகுதியானவர்கள் என்பதைத் தான் ஏ.ஆர். ரஹ்மானின் பாராட்டு புரிய வைக்கிறது.
கருவறை எனும் ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்த செய்தி அறிந்த ஏ.ஆர். ரஹ்மான் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, "Congratulations ....SrikanthDeva ..Keep raising the bar" என பாராட்டி உள்ளார்.
சக கலைஞரை பாராட்டும் அந்த மனசு இசைப்புயலை போல யாருக்குமே வராது என ரஹ்மான் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.

மேலும், ராக்கெட்ரி படத்துக்காக தேசிய விருது வாங்கிய மாதவனையும் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டி இருந்தார். ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படத்தை விட ராக்கெட்ரி: நம்பி விளைவு படம் தான் என்னை ரொம்பவே பாதித்தது என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். பார்த்திபன் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைத்த இரவின் நிழல் படத்தின் மாயவா சாயவா பாடலை பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











